மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு நாவடக்கம் வேண்டும்: முதல்வர் ஸ்டாலின்

"தமிழ்நாட்டு மாணவர்களுக்குரிய நிதியை, எங்களிடம் இருந்து வசூல் செய்த வரியை விடுவிக்க முடியுமா முடியாதா என்பதற்கு மட்டும் பதில் கூறுங்கள்!"
மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு நாவடக்கம் வேண்டும்: முதல்வர் ஸ்டாலின்
ANI
1 min read

தமிழ்நாட்டு எம்.பி.க்களை நாகரிகமற்றவர்கள் என்று அழைத்த மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு நாவடக்கம் வேண்டும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் கண்டித்துள்ளார்.

மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தேசிய கல்விக் கொள்கை மற்றும் பிஎம் ஸ்ரீ தொடர்புடைய புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் தமிழ்நாடு அரசு கையெழுத்திடாமல் இருப்பது தொடர்பாக மக்களவையில் பேசினார். அப்போது திமுக எம்.பி.க்களை நாகரிகமற்றவர்கள் என்று தர்மேந்திர பிரதான் குறிப்பிட்டு பேசினார்.

நாகரிகமற்றவர்கள் என்ற சொல்லை மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பயன்படுத்தியதற்கு திமுக எம்.பி. கனிமொழி உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்தார்கள்.

திமுக எம்.பி. கனிமொழி மக்களவையில் பேசுகையில், "நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் தமிழ்நாட்டு மக்களை அமைச்சர் (தர்மேந்திர பிரதான்) நாகரிகமற்றவர்கள் என்று கூறியிருப்பது மிகுந்த வலியும், வேதனையும் தருகிறது" என்றார்.

இதையடுத்து, நாகரிமற்றவர்கள் என்ற சொல்லைப் பயன்படுத்தியதைத் திரும்பப் பெற்றார் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான். தர்மேந்திர பிரதானின் இந்தப் பேச்சுக்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

"தன்னை மன்னரென எண்ணிக் கொண்டு ஆணவத்துடன் பேசும் ஒன்றியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு நாவடக்கம் வேண்டும்! தமிழ்நாட்டின் நிதியைத் தராமல் ஏமாற்றும் நீங்கள் தமிழ்நாட்டு எம்.பி.க்களைப் பார்த்து அநாகரிகமானவர்கள் என்பதா? தமிழ்நாட்டு மக்களை அவமானப்படுத்துகிறீர்கள். பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இதனை ஏற்கிறாரா?

தேசிய கல்விக் கொள்கை, மும்மொழிக் கொள்கையைத் தமிழ்நாடு அரசு அனுப்பிய பிஎம் ஸ்ரீ புரிந்துணர்வு ஒப்பந்தத்தை முற்றிலுமாக நிராகரித்து விட்டது என எனக்குக் கடிதம் எழுதியது நீங்கள் தானே?

பிரதான் அவர்களே, நாங்கள் மக்களின் எண்ணங்களுக்கு மட்டுமே மதிப்பளித்துச் செயல்படுகிறோம்! உங்களைப் போல நாக்பூரின் சொற்களுக்குக் கட்டுப்பட்டு அல்ல!! நாங்கள் உங்கள் திட்டத்தைச் செயல்படுத்த முன்வரவும் இல்லை, அப்படி முன்வராத என்னை யாரும் வற்புறுத்தவும் முடியாது.

தமிழ்நாட்டு மாணவர்களுக்குரிய நிதியை, எங்களிடம் இருந்து வசூல் செய்த வரியை விடுவிக்க முடியுமா முடியாதா என்பதற்கு மட்டும் பதில் கூறுங்கள்!" என்று எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் முதல்வர் ஸ்டாலின்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in