தூர்தர்ஷன் இலச்சினையிலும் காவிக்கறை அடித்திருப்பது, அனைத்தையும் காவிமயமாக்கும் பாஜக சதித் திட்டத்தின் முன்னோட்டம் என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் முதல்வர் பதிவிட்டுள்ளதாவது:
"உலகப் பொதுமறை தந்த வள்ளுவருக்குக் காவிச்சாயம் பூசினார்கள்;
தமிழ்நாட்டின் ஆளுமைகளின் சிலைகள் மீது காவி பெயிண்ட் ஊற்றி அவமானப்படுத்தினார்கள்;
வானொலி என்ற தூய தமிழ்ப் பெயரை ஆகாஷவாணி என சமஸ்கிருதமயமாக்கினார்கள்;
பொதிகை என்ற அழகிய தமிழ்ச் சொல்லையும் நீக்கினார்கள்;
தற்போது தூர்தர்ஷன் இலச்சினையிலும் காவிக்கறையை அடித்திருக்கிறார்கள்!
தேர்தல் பரப்புரையில் நாம் சொன்னதுபோன்றே, அனைத்தையும் காவிமயமாக்கும் பாஜக சதித்திட்டத்தின் முன்னோட்டம்தான் இவை. இந்த ஒற்றைவாத பாசிசத்துக்கு எதிராக இந்திய மக்கள் வெகுண்டெழுவதை 2024 தேர்தல் முடிவுகள் உணர்த்தும்!"
முன்னதாக, மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜியும் இதை விமர்சித்திருந்தார். நாடு முழுக்க பொதுத் தேர்தல் நடைபெறும் நேரத்தில் தூர்தர்ஷன் இலச்சினை காவி நிறத்தில் மாற்றப்பட்டுள்ளது. அதிர்ச்சியளிப்பதாக அவர் தனது எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டிருந்தார்.