ஜெர்மன் மற்றும் லண்டன் பயணங்களில் அதிக அளவிலான முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளதாக முதல்வர் ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
அரசு முறைப் பயணமாக ஜெர்மனி மற்றும் லண்டனுக்குச் சுற்றுப் பயணம் மேற்கொண்ட முதல்வர் ஸ்டாலின் தமிழகம் திரும்பினார். சென்னை விமான நிலையத்தில் அவருக்கு திமுக சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது :
”ஒரு வாரமாக ஜெர்மனி, இங்கிலாந்து நாடுகளில் பயணம் மேற்கொண்டேன்; மன நிறைவுடன் திரும்பியிருக்கிறேன்; வெளிநாடு பயணம் மாபெரும் வெற்றிப் பயணமாக அமைந்துள்ளது. இந்தப் பயணத்தில் மிக அதிக அளவிலான முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறேன். ரூ. 15,516 கோடி மதிப்பிலான முதலீடுகளை ஈர்க்கப்பட்டுள்ளன. இதன் மூலம் 17,613 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. தமிழகத்தின் மீது நம்பிகை வைத்து 10 புதிய நிறுவனங்கள் முதலீடு செய்துள்ளன.
இந்தப் பயணத்தின்போது ஆயிரம் ஆண்டு பழைமை வாய்ந்த ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் பெரியாரின் திருவுருவப் படத்தைத் திறந்து வைத்து உரையாற்றியது பெருமைக்குரிய நிகழ்ச்சி ஆகும்.
என் வெளிநாட்டு பயணங்களை பொறுக்க முடியாமல் சிலர் புலம்புகிறார்கள். எதற்கு இந்த வெளிநாட்டுப் பயணம், இங்கிருப்பவர்களைப் பார்த்து பேசினால் போதாதா என்று புத்திசாலித்தனமாகக் கேட்பாதாக நினைத்துக் கொண்டு கேள்வி எழுப்புகின்றனர். மத்திய அரசு எவ்வளவு புறக்கணித்தாலும் தமிழகம் முதலிடத்தை நோக்கியே செல்கிறது. தமிழகத்தின் வளர்ச்சிக்கான வெளிநாட்டு பயணங்களும், இங்கு மேற்கொள்ளும் பயணங்களும் ஒருபோதும் நிற்காது; தொடரும்; தூத்துக்குடியைப் போல ஓசூரிலும் முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தவிருக்கிறோம்” இவ்வாறு அவர் பேசினார்.
MK Stalin | TamilNadu CM | Stalin German Visit | Stalin in London | Investments towards TamilNadu