நீட் விலக்கு, மாநில உரிமை, மொழியுரிமைக்கு இடம் உள்ளதா?: இபிஎஸ், அமித் ஷாவுக்கு ஸ்டாலின் கேள்வி

"நேற்று கூட்டணி அறிவித்துள்ள இரண்டு கட்சித் தலைவர்களே… இரண்டு ரெய்டுகளுக்கே அ.தி.மு.க.வை அடமானம் வைத்துள்ளவர்கள்..."
கோப்புப்படம்
கோப்புப்படம்
1 min read

அதிமுக - பாஜக இடையிலான கூட்டணியின் குறைந்தபட்ச செயல் திட்டத்தில் நீட் விலக்கு, மாநில உரிமை, மொழியுரிமை உள்ளிட்டவை இடம்பெறுமா என முதல்வர் மு.க. ஸ்டாலின் கேள்வியெழுப்பியுள்ளார்.

சென்னை வந்திருந்த மத்திய உள்துறை அமித் ஷா கிண்டியில் நேற்று மாலை செய்தியாளர்களைச் சந்தித்தார். செய்தியாளர்கள் சந்திப்பில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலை உள்ளிட்டோர் உடனிருந்தார்கள். அதிமுக தலைமையில் பாஜக கூட்டணி அமைவதை அமித் ஷா உறுதிபடுத்தினார். 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணி உறுதியானதையடுத்து, தமிழ்நாட்டு அரசியல் சூழலில் இதற்கான எதிர்வினைகள் வரத் தொடங்கியுள்ளன.

தவெக தலைவர் விஜய் இதுதொடர்பாக வெளியிட்ட அறிக்கையில், பழைய பங்காளியான அதிமுகவைப் பகிரங்கக் கூட்டாளியாக பாஜக மீண்டும் கைபிடித்ததில் ஆச்சர்யமில்லை என்று விமர்சித்திருந்தார்.

முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் இதுகுறித்து பதிவிட்டுள்ளதாவது:

நேற்று கூட்டணி அறிவித்துள்ள இரண்டு கட்சித் தலைவர்களே… இரண்டு ரெய்டுகளுக்கே அ.தி.மு.க.வை அடமானம் வைத்துள்ளவர்கள், அடுத்து தமிழ்நாட்டை அடமானம் வைக்கப் போகிறீர்களா?

குறைந்தபட்ச செயல்திட்டம் என்று சொல்கிறீர்களே, அதில் மாநில உரிமைகள் - மொழியுரிமை - நீட் விலக்கு - நியாயமான தொகுதி மறுசீரமைப்பு உள்ளிட்டவை இடம்பெறுமா? இந்தத் துரோகக் கூட்டணியை - தோல்விக் கூட்டணியைத் தமிழ்நாட்டு மக்கள் மீண்டும் நிராகரிப்பார்கள்!" என்று முதல்வர் ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

ஏற்கெனவே, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தில்லி சென்றது குறித்தும் அதிமுக உறுப்பினர்கள் கருப்புச் சட்டை அணிந்து சட்டப்பேரவைக்கு வந்தது குறித்தும் பாஜக கூட்டணியோடு தொடர்புபடுத்தி நகைப்புக்குரிய வகையில் முதல்வர் விமர்சித்திருந்தார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in