காஸா மீது நடக்கும் தாக்குதல்கள் மனதை உலுக்குகிறது: முதல்வர் மு.க. ஸ்டாலின் | Gaza | MK Stalin |

பாலஸ்தீனத்தில் அப்பாவி மக்கள் உயிரிழப்பது உடனே தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தல்...
கோப்புப்படம்
கோப்புப்படம்
2 min read

காஸா மீது இஸ்ரேல் நடத்தும் தாக்குதல்கள் மனதை உலுக்குகிறது. அப்பாவி மக்கள் உயிரிழப்பது உடனே தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.

சென்னை எழும்பூரில் காஸாவில் நடக்கும் இனப்படுகொலையைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், முதல்வர் மு.க. ஸ்டாலின், திராவிடர் கழகத் தலைவர் வீரமணி, விசிக தலைவர் திருமாவளவன், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்ட பலரும் திரளாகக் கலந்து கொண்டனர். அப்போது நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியதாவது:-

“காஸா மீது இஸ்ரேல் நடத்தும் கண்மூடித் தனமான தாக்குதல், நம் அனைவரது மனத்தையும் உலுக்கிக் கொண்டிருக்கிறது. உலகத்தையே உலுக்கிக் கொண்டிருக்கிறது. பன்னாட்டு உரிமைச் சட்டங்களையும், ஐக்கிய நாடுகளின் கொள்கைகளையும் அப்பட்டமாக மீறும் இந்தத் தாக்குதல்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தி, மனித நேயப் பண்போடு நம்மை ஒருங்கிணைத்து இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எழுச்சியுடனும் உணர்ச்சியுடனும் ஏற்பாடு செய்திருக்கிறது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கெடுத்திருக்கும் நாம் மட்டுமல்ல, மனித நேய சிந்தனை கொண்டிருக்கும் ஒவ்வொருவரும் காஸாவில் நடந்து கொண்டிருக்கும் இனப்படுகொலையைக் கண்டிக்கிறோம். பாலஸ்தீன மக்களுக்கு நம்முடைய மனிதாபிமான ஆதரவை மனப்பூர்வமாக வழங்குகிறோம். இதுதான் இந்தக் கண்டன இயக்கத்தின் முழக்கமாக அமைந்திருக்கிறது.

கடந்த ஓராண்டாகவே காஸா மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல் அதிகரித்து வருகிறது. இதுவரை ஏறக்குறைய 11,000 பெண்கள், 17,000 குழந்தைகள், 175 பத்திரிகையாளர்கள், 125 ஐநா ஊழியர்கள் என்று 50,000-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளார்கள். 26,000 குழந்தைகள் பெற்றோரை இழந்திருக்கிறார்கள். 1 லட்சத்திற்கும் அதிகமானோர் காயம் ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

சுருக்கமாகச் சொன்னால் ஓராண்டில் காஸாவின் பெரும் பகுதி அழிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் இஸ்ரேலின் ஆக்கிரமிப்புக் கொள்கைக்கு எதிராக பாலஸ்தீன மக்கள் தொடர்ந்து போராடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். அங்கு நடக்கும் கொடுமைகளுக்குச் சிறிய எடுத்துக்காட்டு, கடந்த ஜூன் மாதத்தில், பட்டினியால் வாடிய பாலஸ்தீனியர்கள் உணவுப் பொருள் ஏற்றி வரும் வாகனத்திற்காகக் காத்திருந்தபோது, 45 பேரை இஸ்ரேல் ராணுவம் சுட்டுக் கொன்றிருக்கிறது. உணவுக்காகக் காத்திருந்தவர்கள் உயிர் பறிக்கப்பட்ட இந்நிகழ்வால் அனைவரது இதயமும் நொறுங்கிப் போயுள்ளது.

மனித உரிமைக்கு எதிராக இழைக்கப்படும் கொடுமைகளை, அநீதிகளைக் கண்டிக்காமல் அமைதியாக நடந்து செல்ல யாருக்காவது மனம் ஒப்புமா? சில நாள்களுக்கு முன் காஸாவில் மரணத்தில் விளிம்பில் தவித்த பாலஸ்தீன மக்களுக்கு உணவுப் பொருள்கள், மருந்துகள், குழந்தைகளுக்கான பால் பவுடர்கள் உள்ளிட்ட பொருள்களைக் கொண்டு சென்ற 47 நாடுகளைச் சார்ந்த தன்னார்வலர்களைத் தடுத்து, இஸ்ரேல் அரசு கைது செய்துள்ளது.

பன்னாட்டுச் சட்டங்களை மீறும் இதுபோன்ற செயல்களைக் கண்டிக்காமல் நம்மால் இருக்க முடியுமா? காஸாவில் நடந்து கொண்டிருக்கும் இரக்கமற்ற படுகொலைகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். பாலஸ்தீன மக்களுக்கு எதிராக இஸ்ரேல் நடத்தி வரும் இனப்படுகொலைகள் முடிவுக்குக் கொண்டு வரப்பட வேண்டும். இதுதான் இந்தக் கூட்டத்தின் நோக்கமாக அமைந்திருக்கிறது. இதற்கான முயற்சிகளை மத்திய பாஜக அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று இந்தக் கூட்டத்தின் மூலம் அனைவரின் சார்பாகவும் கேட்டுக்கொள்ளக் கடமைப்பட்டுள்ளேன். மத்திய பாஜக அரசு இஸ்ரேல் மற்றும் அதற்குத் தொடர்புடைய நாடுகளுக்கு அழுத்தம் கொடுத்து, இந்தத் தாக்குதல்களை உடனடியாக நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஐநா உள்ளிட்ட பன்னாட்டு அமைப்புகளுடன் இணைந்து, காஸாவில் அமைதியை நிலை நாட்டவும் மனிதாபிமான உதவிகளைச் செய்யவும் இந்திய அரசு முயல வேண்டும். மனிதாபிமானம் இருக்கும் அனைவரும் இதை வேறு நாட்டு விவகாரமாகப் பார்க்கக் கூடாது. உலக அமைதி என்பது எல்லாருக்கும் பொதுவானது. மனித உரிமை என்பது எல்லாருக்கும் பொதுவானது. அதைக் காத்தாக வேண்டும். மானிட உயிர்கள் ஒவ்வொன்றும் விலை மதிப்பில்லாதது. இந்த மோசமான சூழ்நிலையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உணவு, மருத்துவம் உள்ளிட்டவை உடனடியாக வழங்கப்பட வேண்டும். பாலஸ்தீனியர்களின் மறுவாழ்வுத் திட்டம், காஸாவை மறு கட்டமைப்பு செய்வது, மனிதாபிமான உதவிகளைத் தொடர்ச்சியாக வழங்குவது ஆகியவை குறித்து தெளிவான வாக்குறுதிகள் வழங்கப்பட வேண்டும். அனைத்துப் பிணைக் கதிகளையும் உடனடியாக விடுவிக்க வேண்டும். உலக நாடுகள் முன்வைக்கும் நிபந்தனைகள், உறுதி மொழிகள், பாலஸ்தீன மக்களுக்கு நன்மை செய்யும் வகையில் அமைய வேண்டும்.

இந்நேரத்தில் முக்கியமான செய்தியைப் பகிர்ந்து கொள்ளக் கடமைப்பட்டுள்ளேன். வரும் அக்டோபர் 14 அன்று தமிழ்நாடு சட்ட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெற இருக்கிறது. அதில், காஸாவில் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்களைக் கண்டித்தும், அங்கு உடனடியாகப் போர் நிறுத்தம் தேவை என்பதையும், அதற்கான முயற்சிகளை இந்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை வைத்தும் தீர்மானம் கொண்டுவரப்படும். இந்தத் தீர்மானம் தமிழக மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிப்பதாக இருக்கும். அரசியல் வேறுபாடுகளைக் கடந்து, அனைத்துக் கட்சியினரும் இதை ஆதரிப்பார்கள் என்று முழுமையாக நம்புகிறேன்.

இந்த ஆர்ப்பாட்டக் கூட்டம் மூலமாக காஸா மீதான இஸ்ரேல் தாக்குதலுக்கு எனது கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். அப்பாவி மக்கள் உயிரிழப்பது உடனடியாகத் தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைக்கிறேன்” என்று பேசினார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in