வடமாநிலங்களில் பரப்புரை: முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை

இண்டியா கூட்டணியில் உள்ள நிலையில், தில்லி சென்று தேர்தல் பரப்புரையில் ஈடுபடலாமா என்பது குறித்து ஆலோசனை மேற்கொண்டதாகத் தெரிகிறது.
ஸ்டாலின்
ஸ்டாலின்
1 min read

வடமாநிலங்களில் பரப்புரை செய்வது குறித்து தமிழ்நாடு முதல்வரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் கட்சி நிர்வாகிகளுடன் இன்று ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.

நாடு முழுக்க மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19 முதல் ஜூன் 1 வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இதுவரை 4 கட்ட வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில் இன்னும் மூன்று கட்டங்களுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

இந்நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் வடமாநிலங்களில் பரப்புரை செய்வது குறித்து ஸ்டாலின், திமுக பொருளாளர் டி.ஆர். பாலு உள்ளிட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

முன்னதாக நேற்று இளைஞரணி நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் அன்பகத்தில் நடைபெற்ற நிலையில், இன்று இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுள்ளது.

இதில், தேர்தல் காலத்தில் சரியாக செயல்படாத மாவட்ட செயலாளர்களை மாற்றி, புதிதாக இளைஞர்களை மாவட்ட செயலாளர்களாக நியமிக்க வேண்டும் எனவும், கடினமாக உழைத்தவர்களுக்கு உரிய அங்கீகாரம் வழங்க வேண்டும் என்றும் ஆலோசனை நடந்ததாகக் கூறப்படுகிறது.

மேலும், மு.க. ஸ்டாலின் இண்டியா கூட்டணியில் உள்ள நிலையில் மக்களவை தேர்தலில் மீதமுள்ள மூன்று கட்ட தேர்தலுக்காக தில்லி சென்று தேர்தல் பரப்புரையில் ஈடுபடலாமா என்பது குறித்தும் ஆலோசனை மேற்கொண்டதாகத் தெரிகிறது.

அதேபோல, உள்ளாட்சி தேர்தல் வரும் டிசம்பரில் நடக்க உள்ள நிலையில் அதுதொடர்பாகவும், மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா கொண்டாடப்படுவது தொடர்பாகவும், ஆலோசனைகளை மேற்கொண்டாதகக் கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in