தமிழ்நாட்டில் பாஜகவுக்கு வேண்டியவர்களை டிஜிபி ஆக்க நினைக்கிறார்கள்: அமைச்சர் ரகுபதி | Minister Regupathy |

பொறுப்பு டிஜிபி முறையை அறிமுகப்படுத்தியதே எடப்பாடி பழனிசாமிதான்...
அமைச்சர் ரகுபதி (கோப்புப்படம்)
அமைச்சர் ரகுபதி (கோப்புப்படம்)
1 min read

தமிழ்நாட்டில் தங்களுக்கு வேண்டியவர்களை டிஜிபி ஆக்க பாஜக அரசு நினைக்கிறது என்று குற்றம் சாட்டிய அமைச்சர் ரகுபதி, மத்திய அரசுக்கு ஆபத்து வரும்போதெல்லாம் குறுக்கே விழுந்து தடுத்து வருகிறார் எடப்பாடி பழனிசாமி என்று விமர்சனம் செய்தார்.

புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மத்திய அரசுக்கு ஆபத்து வரும்போதெல்லாம் குறுக்கே விழுந்து தமிழ்நாடு அரசின் மீது தேவையில்லாத குற்றச்சாட்டைச் சுமத்தி பாஜக அரசைக் காப்பாற்றி வருகிறார் எடப்பாடி பழனிசாமி. டிஜிபி விவகாரத்திலும் அதுதான் நடந்திருக்கிறது. மத்திய பாஜக அரசை காப்பாற்றி வருகிறார். ஆளுநர் மூலம் அதிகாரத்தை கைப்பற்றலாம் என்று எண்ணிய மத்திய பாஜக, தற்போது டிஜிபி விவகாரம் மூலம் நடந்துவிடாதா என்று பார்க்கிறார்கள். பொறுப்பு டிஜிபி நியமிக்கப்பட்டிருக்கிறார். ஏன் நிரந்தர டிஜிபி நியமிக்கப்படவில்லை என்று இன்றைக்கு எடப்பாடி பழனிச்சாமி பேசுகிறார். அவர் ஒன்றை மறந்துவிட்டார். தமிழ்நாட்டுக்கு பொறுப்பு டிஜிபி என்பதை அறிமுகப்படுத்தியவர்களே அதிமுகவினர்தான். 2011-ல் ராமானுஜனையும் பிறகு ராஜேந்திரனையும் பொறுப்பு டிஜிபியாக நியமித்தது அவர்கள்தான். அவரே இன்றைக்கு தமிழ்நாட்டிலே பொறுப்பு டிஜிபி இருக்கலாமா? நிரந்தர டிஜிபி வேண்டும் என்று கேட்பது எந்த விதத்திலே நியாயம்? அவர் மத்திய அரசின் விசுவாசி, அடிமை என்பதை நிரூபித்துக் கொண்டிருக்கிறார்.

உத்திரப் பிரதேச மாநிலத்தில் ஐந்து பொறுப்பு டிஜிபிகள் இருக்கிறார்கள். ஆக, பொறுப்பு டிஜிபி விவகாரம் பற்றி பேசுவதற்கு எடப்பாடி பழனிசாமிக்கு எந்த அறுகதையும் கிடையாது.

ஆனால் தமிழ்நாடு அரசை பொறுத்தவரை, பொறுப்பு டிஜிபியாக இருந்த சங்கர் ஜிவால், தன்னை நீடிக்க வேண்டும் என்று யுபிஎஸ்சிக்கு மனு கொடுத்தார். ஆனால் அதை மத்திய அரசு தள்ளுபடி செய்தது. அதன்பின் தமிழ்நாடு அரசு பட்டியல் ஒன்றைக் கொடுத்தது. ஆனால் அந்தப் பட்டியலில் இல்லாத ஒருவர் தான் டிஜிபியாக வர வேண்டும் என்றும் மனு கொடுக்கிறார். அதனால் கால தாமதம் ஏற்பட்டுள்ளது. ஆனால் மத்திய பாஜக அரசு தமிழ்நாடு விவகாரத்தில், தாங்கள் விரும்பிய டிஜிபியை தான் கொண்டுவர வேண்டும் என்கிற ஒரே நோக்கத்தோடு, தமிழ்நாடு அரசு யாரையெல்லாம் கொண்டுவர வேண்டும் என்று விரும்பி கேட்டதோ அவர்களை எல்லாம் மறுக்கிறார். எனவேதான் பொறுப்பு டிஜிபி நீடிக்கிறார்” என்றார்.

Summary

Minister Regupathy accused the BJP government of wanting to appoint the people they want as DGPs in Tamil Nadu.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in