அனைவருக்கும் இணைய சேவை: அமைச்சர் பிடிஆர் அறிவிப்பு

அதிவேக இணைய சேவையை அனைத்து கிராமங்களுக்கும் வழங்குவதை சமூக நீதியின் வெளிப்பாடாக கருதவேண்டும்.
அனைவருக்கும் இணைய சேவை: அமைச்சர் பிடிஆர் அறிவிப்பு
1 min read

கேபிள் டிவி சேவைபோல, 100 Mbps வேகத்தில் மாதம் ரூ. 200 செலவில் வீடுகளுக்கு இணைய வசதி வழங்கும் புதிய திட்டத்தை தமிழக தகவல் தொழில்நுட்ப அமைச்சர் பிடிஆர் இன்று (ஏப்.25) சட்டப்பேரவையில் அறிவித்தார்.

தமிழக சட்டப்பேரவையில் தொழில்துறை மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறையின் மானியக்கோரிக்கைகள் மீதான விவாதம் இன்று (ஏப்.25) நடைபெற்றது. விவாதத்தின் முடிவில் பதிலுரை வழங்கி தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பிடிஆர் பேசியதாவது,

`தமிழ்நாடு ஃபைபர்நெட் கார்ப்பரேஷனின் வழியாக 57,500 கி.மீ. கண்ணாடி வளையத்தின் மூலம் 12,525 கிராம ஊராட்சிகளுக்கு 1Gpbs வேகத்தில் இணைய சேவை ஏற்படுத்தும் திட்டம் கடந்த ஆட்சிக்காலத்தில் தாமதமாக நடைபெற்றது. அதை வேகப்படுத்தியுள்ளோம். இந்த ஆண்டுக்குள் முடிக்கத் திட்டமிட்டுள்ளோம்.

11,639 கிராம ஊராட்சிகளில் இந்த பணி நிறைவடைந்துள்ளது. தமிழ்நாடு ஃபைபர்நெட் கார்ப்பரேஷன் வழியாக சுமார் 2,000 அரசு அலுவலகங்களுக்கு இணைய வசதியை வழங்கிக்கொண்டிருக்கிறோம்.

முழுமையாக தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் ஃபைபர்நெட் கார்ப்பரேஷன் மூலம் இணைய வசதியை வழங்கவும், அதேபோல பொது மக்களுக்கு இணைய சேவையை வழங்கவும் முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது.

கேபிள் டிவியைப்போல, இணைய சேவையை வழங்க முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. இதுவரை 4,700 கிராம ஊராட்சிகளில் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. கூடிய விரைவில், 100 Mbps வேகத்தில் மாதம் ரூ. 200 செலவில் வீடுகளுக்கு இணைய வசதி வழங்கப்படும்.

அதிவேக இணைய சேவையை அனைத்து கிராமங்களுக்கும் வழங்குவதை சமூக நீதியின் வெளிப்பாடாக கருதவேண்டும்’ என்றார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in