அமைச்சர் பதவி வேண்டுமா? பிணை வேண்டுமா?: செந்தில் பாலாஜிக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி

ஆயிரத்துக்கும் மேற்பட்ட சாட்சியங்கள் இருப்பதால், வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்ற வாய்ப்பு இல்லை என உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.
அமைச்சர் பதவி வேண்டுமா? பிணை வேண்டுமா?: செந்தில் பாலாஜிக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி
1 min read

அமைச்சர் செந்தில் பாலாஜி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யாவிட்டால் பிணை ரத்து செய்யப்படும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பணம் பெற்றுக்கொண்டு வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்த வழக்கில் செந்தில் பாலாஜிக்கு உச்ச நீதிமன்றம் முன்பு பிணை வழங்கியது.

அதிமுக ஆட்சியில் 2011 முதல் 2015 வரை போக்குவரத்துத் துறை அமைச்சராகப் பொறுப்பு வகித்திருந்தார் செந்தில் பாலாஜி. அப்போது வேலை வாங்கத் தருவதாகக் கூறி பணமோசடியில் ஈடுபட்டதாக அவர் குற்றச்சாட்டு எழுந்தது. இதன் அடிப்படையில் செந்தில் பாலாஜி மீது அமலாக்கத் துறை வழக்குப்பதிவு செய்தது.

2023-ல் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி, உச்ச நீதிமன்றம் பிணை வழங்கியதைத் தொடர்ந்து, 471 நாள்கள் சிறைவாசத்துக்குப் பிறகு வெளியே வந்தார்.

பிணையில் வெளியே வந்த அமைச்சர் செந்தில் பாலாஜி உடனடியாக அமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

இதைத் தொடர்ந்து, செந்தில் பாலாஜியின் பிணையை ரத்து செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கு விசாரணையின்போது, பிணையில் வெளியே சென்றவுடன் செந்தில் பாலாஜி அமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்டதற்கு உச்ச நீதிமன்றம் எதிர்ப்பு தெரிவித்தது.

இந்நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அமைச்சர் பதவி வேண்டுமா? அல்லது பிணை வேண்டுமா? என்று செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞரிடம் உச்ச நீதிமன்றம் கேள்வியெழுப்பியது. மேலும், விசாரணை தாமதம் ஆனதன் அடிப்படையிலேயே செந்தில் பாலாஜிக்கு உச்ச நீதிமன்றம் பிணை வழங்கியதாகவும் தகுதியின் அடிப்படையில் பிணை வழங்கப்படவில்லை என்றும் சுட்டிக் காட்டியது.

அதிகாரத்தைப் பயன்படுத்தி ஆதாரத்தை அழித்துவிடுவார் என்றால், வழக்கு விசாரணை வேறு மாநிலத்துக்கு மாற்றிக் கொள்ளலாம் என செந்தில் பாலாஜி தரப்பில் வாதிடப்பட்டது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட சாட்சியங்கள் இருப்பதால் வாய்ப்பு இல்லை என உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.

செந்தில் பாலாஜி தரப்பில் அவகாசம் கோரப்பட்டதையடுத்து, அமைச்சர் பதவி வேண்டுமா? பிணை வேண்டுமா? என்பதை முடிவு செய்ய திங்கள்கிழமை வரை அவகாசம் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in