
திமுக துணைப் பொதுச்செயலாளர் பொறுப்பில் இருந்து அமைச்சர் பொன்முடியை நீக்கி உத்தரவிட்டுள்ளார் தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஏப்.6) நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட தமிழக வனத்துறை அமைச்சர் பொன்முடி, பெண்களையும் சைவ - வைணவத்தையும் இழிவுபடுத்திப் பேசியதாகச் சமூகவலைத்தளங்களில் பலரும் கண்டனம் தெரிவித்தார்கள்.
பொன்முடியின் சர்ச்சைப் பேச்சு தொடர்பாக திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் கனிமொழி, தன் எக்ஸ் கணக்கில் வெளியிட்டிருந்த பதிவில் கூறியதாவது,
`அமைச்சர் பொன்முடியின் சமீபத்திய பேச்சு ஏற்றுக்கொள்ள முடியாதது. எந்த காரணத்திற்காகப் பேசப்பட்டிருந்தாலும் இப்படிப்பட்ட கொச்சையான பேச்சுகள் கண்டிக்கத்தக்கது’ என்றார்.
இந்நிலையில், திமுக துணைப் பொதுச்செயலாளர் பொறுப்பில் இருந்து பொன்முடி விடுவிக்கப்படும் அறிவிப்பை, தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் இன்று (ஏப்.11) வெளியிட்டுள்ளார்.
இதைத் தொடர்ந்து, திமுக கொள்கை பரப்புச் செயலாளர் பொறுப்பில் இருந்து மாநிலங்களவை எம்.பி. திருச்சி சிவா விடுவிக்கப்பட்டு, அவர் புதிய துணைப் பொதுச்செயலாளராக நியமிக்கப்படுவதாக மு.க. ஸ்டாலின் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.