
சர்ச்சை பேச்சுக்காக கட்சிப் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்ட நிலையில், அதற்காக அமைச்சர் பொன்முடி வருத்தம் தெரிவித்துள்ளார்.
கடந்த ஏப்ரல் 6 அன்று, தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட வனத்துறை அமைச்சர் பொன்முடி, பெண்களைத் தவறான முறையிலும், சைவம், வைணம் குறித்து சர்ச்சைக்குரிய வகையிலும் பேசியிருந்தார்.
பொன்முடியின் பேச்சுக்குத், திமுக துணைப் பொதுச்செயலாளர் கன்மொழி உட்பட பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து, திமுக துணைப் பொதுச்செயலாளர் பொறுப்பில் இருந்து பொன்முடி நீக்கப்படுவதாக அக்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் நேற்று (ஏப்.11) அறிவித்தார்.
பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பேசிய பொன்முடியைக் கண்டித்து அதிமுக மகளிர் அணி சார்பில் ஏப்.16 அன்று சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
இந்நிலையில், அமைச்சர் பொன்முடி இன்று (ஏப்.12) வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது,
`தகாத பொருளில் தவறான சொற்களைப் பயன்படுத்தி நான் பேசிய பேச்சுக்கு மனப்பூர்வமாக மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். இந்தத் தகாத கருத்தை நான் பேசியது குறித்து உடனடியாக மனப்பூர்வமாக வருந்தினேன். நீண்ட காலம் பொது வாழ்க்கையில் உள்ள எனக்கு இதுபோன்ற தடுமாற்றம் ஏற்பட்டது குறித்து நான் மிகவும் வருந்துகிறேன்.
பலருடைய மனதைப் புண்படுத்தும் வகையில் இப்பேச்சு அமைந்து விட்டது குறித்தும், அவர்கள் தலைகுனியும் சூழல் ஏற்பட்டது குறித்தும் நான் மிகவும் மனம் வருந்துகிறேன். மனம் புண்பட்ட அனைவரிடமும் நான் பேசிய பேச்சுக்கு மீண்டும் மீண்டும் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்’ என்றார்.