
சிபிஎஸ்சி பள்ளிகளில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள கட்டாய தேர்ச்சி முறை ரத்து குறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியதற்கு, தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் எதிர்வினையாற்றியுள்ளார்.
பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகளை இன்று (மே 8) காலை 9 மணிக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் வெளியிட்டார். இதைத் தொடர்ந்து, செய்தியாளர்கள் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார்.
ஒவ்வொரு வருடமும் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் உள்ள 25% இடங்கள் நலிந்த பிரிவினருக்கு ஒதுக்கீடு செய்யப்படும். ஆனால் கல்வி உரிமைச் சட்ட ஒதுக்கீட்டின் கீழ், வரும் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை இன்னமும் தொடங்கவில்லை. அது குறித்து செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த அமைச்சர், `மத்திய அரசுக்கு தலைமைச் செயலாளர் கடிதம் எழுதியுள்ளார். இந்த விவகாரத்தில் முந்தைய கல்வி ஆண்டுகளுக்காக சுமார் ரூ. 600 கோடியை மத்திய அரசு நிலுவையில் வைத்துள்ளது. அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் ஒரு அங்கம்தான் கல்வி உரிமைச் சட்டம்.
உச்ச நீதிமன்றத்தின் அறிவுறுத்திலின்படியே கல்வி உரிமை சட்டத்தை நாடாளுமன்றம் இயற்றியது. ஆனால் உச்ச நீதிமன்றத்தின் அறிவுறுத்தலையே அவர்கள் மதிக்காமல் இருப்பது வேதனை அளிக்கிறது. ஒரு வருடத்தில் சுமார் ஒரு லட்சம் பிள்ளைகள் வரை தனியார் பள்ளிகளில் படித்து இதனால் பலன் பெறுகிறார்கள்.
அவர்களின் வாய்ப்பு பறிக்கப்படுகிறது. எனவே இதை குறிப்பிட்டு மத்திய அரசுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. இன்னும் பதில் வரவில்லை. பதில் வந்ததும் மேற்படி நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.
சிபிஎஸ்சி பள்ளிகளில் 5 மற்றும் 8-ம் வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கான கட்டாய தேர்ச்சி நடைமுறை வரும் கல்வியாண்டு முதல் ரத்து செய்யப்படும் என்று அண்மையில் செய்தி வெளியானது. அது தொடர்பாக செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த அமைச்சர், `ஒரு வருடம் ஃபெயில் ஆகிவிட்டு படித்தால்தான் என்ன? என்றெல்லாம் நாட்டின் மூத்த அமைச்சர் (நிர்மலா சீதாராமன்) பேசவேகூடாது. இடைநிற்றல் விகிதத்தை தொடக்க கல்வி நிலையில் நாங்கள் பூஜ்யம் ஆக்கியிருக்கிறோம். ஆனால் இவ்வாறான நடவடிக்கைகளால் பிள்ளைகள் கல்வியைவிட்டு விலகிவிடுவார்கள்.
அவர்களின் நோக்கம் என்னவாக இருக்கிறது என்பது தெரியவில்லை. விளையாட்டுத்தனமாக அந்த வார்த்தையை பயன்படுத்திவிட்டார். அவ்வளவு பெரிய மனிதர் வாயிலிருந்து வரும் வார்த்தைகள், விவரம் புரியாமல் கூறப்படுவதுதான் வேதனையாக உள்ளது’ என்றார்.