சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கு இன்று (மே 4) ஆரஞ்சு எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்
சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளுக்கு இன்று (மே 4) இரவு 7 மணி வரை ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்து வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தமிழகத்தின் 11 இடங்களில் வெயில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை நேற்று தாண்டியது. இதன் தொடர்ச்சியாக, கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம் இன்று (மே 4) தமிழகத்தில் தொடங்கியது.
இருப்பினும், மே 5 மற்றும் 6-ல் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், வெப்பச்சலனம் காரணமாக சென்னையின் பல்வேறு பகுதிகளிலும், சென்னையை ஒட்டியுள்ள காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களிலும் பிற்பகலில் தொடங்கி பலத்த காற்றுடன் மழை பெய்ய ஆரம்பித்தது.
மேலும், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கும், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி, கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களுக்கும் இன்று (மே 4) இரவு 7 மணி வரை ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்து வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
மணிக்கு 40 கி.மீ. வேகத்தில் வீசிய காற்றால் சிங்கப்பூர், இலங்கை, தில்லி, திருவனந்தபுரம், மதுரை, கோவை ஆகிய இடங்களில் இருந்து வருகை தந்த விமானங்களால் சென்னை விமான நிலையத்தில் தரையிறங்க முடியவில்லை. அதன்பிறகு 15-20 நிமிடங்கள் வரை வானில் வட்டமடித்த பிறகு, விமானங்கள் ஒவ்வொன்றாக தரையிறங்கின.