தமிழக அமைச்சரவையில் மீண்டும் இணைக்கப்பட்ட மனோ தங்கராஜ், அமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
சென்னை கிண்டியிலுள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் மனோ தங்கராஜுக்கு ஆளுநர் ஆர்.என். ரவி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இவருக்கு பால்வளத் துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
தமிழக அமைச்சர்கள் செந்தில் பாலாஜி மற்றும் பொன்முடி தங்களுடைய அமைச்சர் பதவியை ஞாயிற்றுக்கிழமை ராஜினாமா செய்தார்கள். இதனால், அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டது. செந்தில் பாலாஜியின் மின் துறை, போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்எஸ் சிவசங்கருக்கு கூடுதல் பொறுப்பாக ஒதுக்கப்பட்டது. செந்தில் பாலாஜியின் மற்றொரு பொறுப்பான மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் முத்துசாமிக்கு கூடுதல் பொறுப்பாக ஒதுக்கப்பட்டது.
பால்வளத் துறை அமைச்சராக இருந்த ஆர்.எஸ். ராஜகண்ணப்பன் வசம் பொன்முடி வகித்து வந்த வனம் மற்றும் கதர் துறை ஒப்படைக்கப்பட்டது. இதனால், பால்வளத் துறை காலியாக இருந்தது.
மேலும், பத்மநாபபுரம் சட்டப்பேரவை உறுப்பினர் மனோ தங்கராஜை அமைச்சரவையில் இணைக்க முதல்வர் மு.க. ஸ்டாலின் பரிந்துரைத்தார். இதை ஆளுநர் ஆர்.என். ரவி ஏற்றுக்கொண்டார். பரிந்துரைகளை ஏற்றுக்கொண்ட ஆளுநர் ஆர்.என். ரவி திங்கள்கிழமை மாலை ஆளுநர் மாளிகையில் மனோ தங்கராஜின் பதவியேற்பு விழா நடைபெறும் என அறிவித்திருந்தார்.
இதன்படி சென்னை கிண்டியிலுள்ள ஆளுநர் மாளிகையில் இன்று மாலை 6 மணியளவில் பதவியேற்பு விழா நடைபெற்றது. முதல்வர் மு.க. ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், மூத்த அமைச்சர்கள் உள்ளிட்டோர் பதவியேற்பு விழாவில் கலந்துகொண்டார்கள். மிகச் சிறிய அளவிலேயே பதவியேற்பு விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
ஆளுநர் ஆர்.என். ரவி பதவிப் பிரமாணம் செய்து வைக்க மனோ தங்கராஜ் அமைச்சராகப் பதவியேற்றுக் கொண்டார். அமைச்சராகப் பதவியேற்றுக் கொண்ட பிறகு ஆளுநர் ஆர்.என். ரவி மற்றும் முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு மனோ தங்கராஜ் பூங்கொத்து வழங்கினார். அமைச்சர் மனோ தங்கராஜுக்கு ஆளுநர் ஆர்.என். ரவி மற்றும் முதல்வர் மு.க. ஸ்டாலின் பூங்கொத்து வழங்கினார்கள்.
தமிழக அமைச்சரவையில் பால்வளத் துறை காலியாக இருந்த நிலையில், மனோ தங்கராஜுக்கு பால்வளத் துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த செப்டம்பரில் அமைச்சரவையிலிருந்து விடுவிக்கப்பட்ட மனோ தங்கராஜ், அப்போது பால்வளத் துறை அமைச்சராக இருந்தார்.