தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு சிபிஐ கூட்டணி என்று பெயர் வைத்திருக்கலாம்: மாணிக்கம் தாகூர் | NDA | Congress |
தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பெயரை சிபிஐ கூட்டணி என்று மாற்றி வைத்திருக்கலாம் என்று காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் விமர்சித்துள்ளார்.
மதுரையில் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தேஜகூ அல்ல சிபிஐ கூட்டணி
“தொடர்ந்து தமிழ்நாட்டை ஏமாற்றுவதிலும், தமிழர்களை ஏமாளிகளாக நினைப்பதிலும் பாஜக குறியாக இருக்கிறது. இந்தக் கூட்டணி அமைந்து நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன், அன்புமணி என அனைவரும் ஒன்றாக நின்றார்கள். இவர்கள் அனைவருக்கும் பொதுவான விஷயம் ஒன்று இருக்கிறது. அதுதான் சிபிஐ. அன்புமணி, டிடிவி தினகரன் இருவர் மீது சிபிஐயில் வழக்கு இருக்கிறது. இதுவே அனைவரையும் கொண்டு வந்து நிறுத்திவிட்டது. இந்தக் கூட்டணிக்கு தேசிய ஜனநாயகக் கூட்டணி என்று பெயர் வைத்ததற்குப் பதிலாக சிபிஐ கூட்டணி என்றே வைத்திருக்கலாம்.
பணத்தையும் அதிகாரிகளையும் நம்புகிறார்கள்
தேசிய ஜனநாயகக் கூட்டணி சிபிஐ அதிகாரிகளால் திரட்டப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளது. இது மக்களின் நம்பிக்கையை இழந்த கூட்டணி. மூன்றாவது இடத்திற்கே தட்டித் தடுமாறித்தான் வரப்போகிறது. இந்தக் கூட்டணியில் பணமும் அதிகாரிகளும் ஹிந்தி பேசும் முதலாளிகளும் அதிகம் இருக்கிறார்கள். இந்தப் பலத்துடன் இக்கூட்டணி வந்து நிற்கப்போகிறது. மக்களின் நன்மைக்காக இல்லாமல் பணத்தையும் அதிகாரிகளையும் மட்டுமே நம்பி வரும் இந்தக் கூட்டணி தமிழ்நாட்டில் தோற்கடிக்கப்பட வேண்டும்.
பாஜகவுக்கு எதிரான மனநிலை
குறிப்பாக பாஜக வேரூன்றுவதற்காக முயற்சி எடுத்து வருகிறது. தமிழ்நாட்டு மக்கள் அவர்களுக்கு சரியான பாடம் கற்பிப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு முழுமையாக உள்ளது. பாஜகவிற்கு எதிரான மனநிலை மிகப்பெரும் அளவில் இருக்கிறது. குறிப்பாக மக்களின் ஜீவாதார பிரச்னைபோல் மாறிவிட்ட 100 நாள் திட்டம் மறுக்கப்பட்டு, நிதி ஒதுக்கப்படாமல் தொடர்ந்து தமிழ்நாட்டு மக்களை வஞ்சித்து வருகின்ற மோடி அரசுக்கு எதிரான மனநிலை தொடர்கிறது. சிறு தொழில் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. மோடி அரசின் தவறாக பொருளாதாரக் கொள்கைகளால் தமிழ்நாடு பாதிக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் பாஜக இடம்பெறும் கூட்டணி மூன்றாவது இடத்தில்தான் வரும். இந்த முறை அந்தப் பரிசு அதிமுக கூட்டணிக்குக் கிடைத்திருக்கிறது” என்றார்.
Congress MP Manickam Tagore has criticized that the name of National Democratic Alliance can be changed to CBI Alliance.
