வரும் ஜனவரி முதல் ரேஷன் அட்டை வைத்துள்ள அனைவருக்கும் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என வருவாய்த் துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் விருதுநகர் மாவட்டத்தில் இன்று ஆய்வு மேற்கொண்டார். அருப்புக்கோட்டை தொகுதிக்குள்பட்ட இடங்களில் புதிதாகக் கட்டப்பட்ட அங்கன்வாடி மையம், கலையரங்கம் உள்ளிட்டவற்றைத் திறந்து வைத்தார். இதுதொடர்புடைய நிகழ்ச்சியொன்றில் பேசிய அவர் "மகளிர் உரிமைத் தொகை (மாதம் ரூ. 1,000) சிலருக்கு வழங்கப்படாமல் உள்ளது. அவர்கள் அனைவருக்கும் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும். ஒரு ரேஷன் அட்டை வைத்துள்ள அனைவருக்கும் கொடுக்கப்படும். இரு மாதங்களுக்குப் பிறகு இதற்காகப் பட்டியல் தயாரிக்கவுள்ளோம். ஜனவரிக்கு மேல் இந்தப் பட்டியலைத் தயாரித்து ரேஷன் அட்டை வைத்துள்ள அனைவருக்கும் மகளிர் உரிமைத் தொகை வழங்கவுள்ளோம். ரூ. 1,000 என்பது ஒவ்வொரு வீட்டுக்கும் வந்து சேரும். இதற்கு முதல்வர் ஒப்புக்கொண்டுவிட்டார். இதை ஜனவரிக்கு மேல் வைத்துக்கொள்வோம் என்றிருக்கிறார்கள்" என்றார் அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன்.
பெண்களுக்கு மாதந்தோறும் ரூ. 1,000 வழங்கப்படும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் கடந்தாண்டு செப்டம்பர் 15 அன்று தொடங்கப்பட்டது. தற்போது வரை 1.62 கோடி பெண்களுக்கு மாதந்தோறும் ரூ. 1,000 வழங்கப்பட்டு வருகிறது.