சிவாஜி கணேசனின் அன்னை இல்லத்தை ஜப்தி செய்யுமாறு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சிவாஜி கணேசனின் பேரன் துஷ்யந்த் (ராம்குமார் மகன்) கடன் வழக்கில், சிவாஜியின் அன்னை இல்லத்தை ஜப்தி செய்ய சென்னை உயர் நீதிமன்றம் கடந்த மார்ச் 3 அன்று உத்தரவு பிறப்பித்தது.
இந்த வழக்கில் இடையீட்டு மனுவைத் தாக்கல் செய்த நடிகர் பிரபு, அன்னை இல்லம் தன் பெயரில் இருப்பதாகவும் சகோதரர் ராம்குமார் பெற்ற கடனுக்காகத் தன் பெயரில் உள்ள வீட்டை ஜப்தி செய்ய பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யுமாறும் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இதை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி, "தாங்களும் தங்களுடைய சகோதரரும் ஒன்றாகத்தானே வாழ்ந்து வருகிறீர்கள். அவருடையக் கடனைத் தாங்கள் செலுத்திவிட்டு, அவரிடமிருந்து பிறகு பெற்றுக்கொள்ளலாமே" என்று குறுக்கிட்டார்.
இதற்குப் பிரபு தரப்பில் வாதிடுகையில், ராம்குமார் நிறைய பேரிடம் கடன் பெற்றுள்ளதாகவும் அவருக்கு உதவ முடியாது என்றும் கூறப்பட்டது. இதனிடையே, சென்னை உயர் நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்த ராம்குமார், அன்னை இல்லத்தில் தனக்கு எந்த உரிமையும் பங்கும் இல்லை என்றும் எதிர்காலத்தில் இதில் உரிமை எதுவும் கோரமாட்டேன் எனவும் குறிப்பிட்டார்.
இந்த வழக்கில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பை அளித்துள்ளது. பிரபுவின் வாதம் மற்றும் ராம்குமாரின் பிரமாண பத்திரத்தை ஏற்றுக்கொண்ட சென்னை உயர் நீதிமன்றம், சிவாஜின் கணேசனின் அன்னை இல்லத்தை ஜப்தி செய்யுமாறு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து தீர்ப்பளித்தது. மேலும், வில்லங்கச் சான்றிதழிலும் ஜப்தி உத்தரவை நீக்க வேண்டும் என பதிவுத் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வழக்கு விவரம்
சிவாஜி கணேசனுக்கு ராம்குமார், பிரபு என இரு மகன்கள் உள்ளார்கள். ராம்குமாரின் மகன் துஷ்யந்தும், அவரது மனைவி அபிராமியும் ஈஷன் ப்ரொடக்ஷன்ஸ் என்ற படத் தயாரிப்பு நிறுவனத்தின் பங்குதாரர்களாக உள்ளார்கள்.
இந்த ஈஷன் ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனத்தால், சில ஆண்டுகளுக்கு முன்பு விஷ்ணு விஷால், நிவேதா பெத்துராஜ் நடிப்பில், எழில் இயக்கத்தில் ஜெகஜால கில்லாடி என்ற படம் தயாரிக்கப்பட்டது. இதற்காக தனபாக்கியம் எண்டர்பிரைசஸ் நிறுவனத்திடம் இருந்து ரூ. 3.74 கோடி கடன் வாங்கப்பட்டுள்ளது. இந்த கடன் தொகை 30 சதவீத வட்டியுடன் திருப்பியளிக்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டிருந்தது.
ஜெகஜால கில்லாடி படத்தின் தயாரிப்பு பாதியிலேயே நின்றுபோனதால், திட்டமிட்டபடி இந்த கடன் தொகை திருப்பியளிக்கப்படவில்லை. இந்த விவகாரம் தொடர்பாக தனபாக்கியம் எண்டர்பிரைசஸ் அளித்த புகாருக்கு தீர்வு காணும் வகையில், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ரவீந்திரன் மத்தியஸ்தராக நியமிக்கப்பட்டார்.
இதைத் தொடர்ந்து, கடனுக்கான அசல் தொகையை வட்டியுடன் சேர்த்து ரூ. 9.02 கோடியை தனபாக்கியம் எண்டர்பிரைசஸுக்கு ஈஷன் நிறுவனம் வழங்குவது மட்டுமல்லாமல், ஜெகஜால கில்லாடி படத்தின் அனைத்து உரிமைகளையும் வழங்கவேண்டும் என்று ஈஷன் ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனத்திற்கு கடந்தாண்டு மே மாதம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
ஆனால் நீதிபதியின் உத்தரவுப்படி வட்டியுடன் சேர்த்து கடன் தொகை திருப்பி அளிக்கப்படவில்லை. இதை ஒட்டி, நிலுவையில் உள்ள கடன் தொகையான ரூ. 9.39 கோடியைப் பெறும் வகையில், ராம்குமார் தந்தை சிவாஜி கணேசனின் `அன்னை இல்லம்’ வீட்டை ஐப்தி செய்து பொது ஏலம் விட உத்தரவிடுமாறு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது தனபாக்கியம் எண்டர்பிரைசஸ்.