
திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றியதாக சீமான் மீது நடிகை விஜயலட்சுமி அளித்த புகாரை ரத்து செய்ய மறுத்து தீர்ப்பு வழங்கியுள்ளது சென்னை உயர் நீதிமன்றம்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றியதாக கடந்த 2011-ல் நடிகை விஜயலட்சுமி வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்தப் புகாரின் அடிப்படையில் சீமான் மீது வழக்குப்பதியப்பட்டது.
தனக்கு எதிராகப் பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி கடந்தாண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார் சீமான்.
அந்த மனுவில், `கடந்த 2011-ல் அளித்த புகாரை 2012-ல் திரும்பப் பெற்றுக்கொள்வதாக நடிகை விஜயலட்சுமி கடிதம் கொடுத்துள்ளார். அதன் அடிப்படையில், அந்த வழக்கை காவல்துறை முடித்து வைத்தது. இந்நிலையில், மீண்டும் அந்த வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டுள்ளது. எனவே வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
சீமான் தாக்கல் செய்த இந்த வழக்கு மீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றபோது, காவல்துறை தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அத்துடன், விஜயலட்சுமி தரப்பு வாதம் சீல் இடப்பட்ட உரையில் தாக்கல் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, இந்த வழக்கு மீதான இறுதி விசாரணையை இன்று (பிப்.17) நடத்தினார் நீதிபதி ஜி. இளந்திரையன்.
வாதங்கள் நிறைவு பெற்ற பிறகு தீர்ப்பளித்த நீதிபதி இளந்திரையன், சீமான் மீது விஜயலட்சுமி அளித்த புகாரை ரத்து செய்ய முடியாது என்றும், இந்த வழக்கு மீதான விசாரணையை 12 வாரங்களுக்குள் நடத்தி முடித்து இறுதி அறிக்கையைத் தாக்கல் செய்யவேண்டும் என்றும் தீர்ப்பு வழங்கி, சீமான் தாக்கல் செய்த மனுவை ரத்து செய்து உத்தரவிட்டார்.