சவுக்கு சங்கரின் உடல்நிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்: சென்னை உயர் நீதிமன்றம்

மதுரை மாவட்ட போதைப் பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது சவுக்கு சங்கர் கையில் கட்டுடன் இருந்தார்.
சவுக்கு சங்கரின் உடல்நிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்: சென்னை உயர் நீதிமன்றம்

பத்திரிகையாளரும், யூடியூபருமான சவுக்கு சங்கரின் உடல்நிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு மாவட்ட சட்ட சேவைகள் ஆணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பெண் காவல் அதிகாரிகளைத் தரக்குறைவாகப் பேசியதாக சவுக்கு சங்கர் மீது கோவை சைபர் கிரைம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளார்கள். இந்த வழக்கு தொடர்பாக சவுக்கு சங்கர் தேனியில் கடந்த 4-ம் தேதி கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்டு கோவை அழைத்துச் செல்லும் வகையில் சவுக்கு சங்கர் சென்ற வாகனம் விபத்துக்குள்ளானது. இதில் சவுக்கு சங்கர் மற்றும் காவல் துறையினர் காயமடைந்ததாகத் தகவல்கள் வெளியாகின.

தாராபுரத்தில் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சையளிக்கப்பட, பிறகு அவர் கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். கோவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சவுக்கு சங்கரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டது. இதன்படி, கோவை மத்திய சிறையில் சவுக்கு சங்கர் அடைக்கப்பட்டார்.

கோவையில் சிறையில் வைத்து காவல் துறையினரால் சவுக்கு சங்கர் தாக்கப்பட்டதாக சவுக்கு சங்கர் தரப்பு வழக்கறிஞர் குற்றம்சாட்டினார். தமிழ்நாடு சிறைத் துறை சார்பில் இதற்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டது.

இதுதொடர்பாக, சவுக்கு சங்கர் வழக்கறிஞர் தரப்பில் நீதிமன்றத்தில் புகாரளிக்கப்பட்டது. புகாரைத் தொடர்ந்து, மாவட்ட சட்டப் பணிகள் ஆணையக் குழுவைச் சேர்ந்த 5 பேர் அடங்கிய குழு செவ்வாய்க்கிழமை சிறைக்குச் சென்று விசாரணை நடத்தினார்கள்.

இதனிடையே, சவுக்கு சங்கரின் தாயார் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவைத் தாக்கல் செய்தார். சவுக்கு சங்கர் தாக்கப்பட்டது குறித்து நீதித் துறை விசாரணை நடத்த வேண்டும், அவருக்குத் தனியார் மருத்துவமனையில் உரிய சிகிச்சையளிக்க வேண்டும் என அவரது தாயார் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மனுவை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஏடி ஜெகதீஷ் சந்திரா மற்றும் கலாமதி ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று விசாரித்தது. சவுக்கு சங்கரின் தாயார் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஜான் சத்யன் வாதிடுகையில், "கைது நடவடிக்கைக்கு முன்பு எடுக்கப்பட்ட மருத்துவப் பரிசோதனையில் அவர் முழு உடற்தகுதியுடன் இருந்ததாக அதிகாரிகளால் சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளது. எனினும், சவுக்கு சங்கரை வழக்கறிஞர் அண்மையில் சிறையில் சந்தித்தபோது, தான் தாக்கப்பட்டதாகவும், கையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாகவும் சவுக்கு சங்கர் தெரிவித்திருக்கிறார்" என்றார்.

இதைக் கேட்டுக்கொண்ட சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் மாவட்ட சட்டப் பணிகள் ஆணையக் குழு சவுக்கு சங்கரின் உடல்நிலை குறித்த அறிக்கையைத் தாக்கல் செய்யும் வரை காத்திருப்பதாகத் தெரிவித்து வழக்கை ஒத்திவைத்தார்கள்.

இதனிடையே, போதைப் பொருள் தடுப்பு வழக்கில் மதுரை மாவட்ட போதைப் பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் சவுக்கு சங்கர் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவர் கையில் கட்டுடன் வந்து இறங்கினார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in