ஜாய் கிரிஸில்டாவுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி: சென்னை உயர் நீதிமன்றம் | Joy Crizildaa |
மாதம்பட்டி ரங்கராஜ் விவகாரத்தில் தங்கள் நிறுவனத்தை தொடர்புபடுத்தி சமூக ஊடகங்களில் கருத்துகள் பதிவிட, ஜாய் கிரிசில்டாவுக்கு தடை விதிக்கக்கோரி மாதம்பட்டி பாகசாலா நிறுவனம் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
பிரபல சமையல் கலைஞரான மாதம்பட்டி ரங்கராஜ் தன்னைத் திருமணம் செய்து ஏமாற்றியதாக ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டா காவல்துறையிலும் மகளிர் ஆணையத்திலும் புகார் அளித்திருந்தார். மேலும், தனக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று மாதம்பட்டி ரங்கராஜ் மீது தொடர்ந்து சமூக ஊடகங்களிலும் பேட்டிகளிலும் குற்றச்சாட்டுகளை முன் வைத்து வந்தார்.
இதற்கிடையில் அவர் மகளிர் ஆணையத்தின் புகாரின் அடிப்படையில் மாதம்பட்டி ரங்கராஜிடம் விசாரணை மேற்கொள்ள ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது. குற்றம் சாட்டியபோது ஜாய் கிரிஸில்டா கர்ப்பிணியாக இருந்த நிலையில், அவருக்குக் கடந்த அக்டோபர் 31 அன்று ஆண் குழந்தை பிறந்தது. இதைத் தொடர்ந்து மகளிர் ஆணைய விசாரணைக்கு இருவரும் ஆஜராகி இருந்த நிலையில், கடந்த நவம்பர் 4 அன்று நடந்த விசாரணையில் ஜாய் கிரிஸில்டாவைத் திருமணம் செய்ததை மாதம்பட்டி ரங்கராஜ் ஒப்புக்கொண்டார். பின்னர் அடுத்த நாளே அது கட்டாயத்தின் பேரில் நடந்த திருமணம் என்றும், மரபணு பரிசோதனையில் அது தன் குழந்தைதான் என்பது நிரூபிக்கப்பட வேண்டும் என்றும் மாதம்பட்டி ரங்கராஜ் அறிக்கை வெளியிட்டார்.
இதற்கிடையில், ஜாய் கிரிசில்டா மாதம்பட்டி ரங்கராஜுக்கு தொடர்புடைய மாதம்பட்டி பாகசாலா நிறுவனத்தை டேக் செய்து எக்ஸ் தளத்தில் தொடர்ந்து அவதூறுகளைப் பதிவு செய்ததாகவும், அதனால் தங்களது நிறுவனத்திற்கு வர்த்தக ரீதியாகப் பாதிப்பு ஏற்பட்டதாகவும் மாதம்பட்டி பாகசாலா தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதில், ஜாய் கிரிசில்டா பதிவால் ரூ.12 கோடி வர்த்தக இழப்பு வழங்க வேண்டும் என்று கூறப்பட்டது. அதில், தன்னைப் பற்றி அவதூறுக் கருத்துகள் பரப்பும் ஜாய் கிரிஸில்டாவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று மாதம்பட்டி ரங்கராஜ் கோரிக்கை விடுத்திருந்தார். இந்த வழக்கு இன்று விசாரித்த நீதிபதி செந்தில்குமார் , ஜாய் கிரிஸில்டாவுக்கு எதிராக மாதம்பட்டி பாகசாலா நிறுவனம் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
The Madras High Court dismissed the petition filed by the Madhampatty Pakshala Company seeking a ban on Joy Crizildaa from posting comments on social media relating to the Madhampatty Rangaraj

