எம்-சாண்ட் மணல், பி-சாண்ட் மற்றும் ஜல்லி விலையை ஏற்றப்பட்ட விலையிலிருந்து ரூ. 1,000 குறைத்து விற்பனை செய்ய கல்குவாரி, கிரஷர்கள் மற்றும் லாரி உரிமையாளர்கள் சங்கம் ஒப்புகொண்டுள்ளது.
குவாரி உரிமையாளர்களிடமிருந்து அரசு வசூலித்து வந்த ராயல்டி ரூ. 90-ல் இருந்து ரூ. 165 ஆக அண்மையில் உயர்த்தப்பட்டது. இதைக் குறைக்க வலியுறுத்தி குவாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டார்கள். நீர்வளம் மற்றும் இயற்கை வளங்கள் துறை அமைச்சர் துரைமுருகனுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில் உடன்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து, வேலைநிறுத்த முடிவு திரும்பப் பெறப்பட்டது. அதேசமயம், விலை உயர்த்த அரசு அனுமதி வழங்கியதைத் தொடர்ந்து எம்-சாண்ட் டன்னுக்கு ரூ. 6,000 மற்றும் பி-சாண்ட் டன்னுக்கு ரூ. 7,000 என விலை உயர்த்தப்பட்டது. இதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தார்கள்.
இந்நிலையில், அமைச்சர் துரைமுருகன் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் கல்குவாரி, கிரஷர்கள் மற்றும் லாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகளுடன் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் கல்குவாரி, கிரஷர் மற்றும் லாரி உரிமையாளர்கள் சங்கம் எம்-சாண்ட், பி சாண்ட் மற்றும் ஜல்லி ஆகியவற்றுக்கு ஏற்றப்பட்ட விலையிலிருந்து ரூ. 1,000 குறைத்து விற்பனை செய்யப்படும் என சங்கத்தினரால் ஏற்கப்பட்டதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
மேலும், சாதாரண கற்கள் மீதான சீனியரேஜ் தொகையை மெட்ரிக் டன் ஒன்றுக்கு ரூ. 33 என்பது ஏற்றுக்கொள்ளப்பட்டு அதற்கான அரசாணை ஒரு வார காலத்துக்குள் வெளியிடப்படவுள்ளது.