சாதி தான் தமிழ்நாட்டைப் பிளவுபடுத்தும் முதலாவது சக்தி: முதல்வர் மு.க. ஸ்டாலின்

"ஆதிதிராவிடருக்கு நலத்திட்ட உதவிகளைச் செய்வதோடு அரசின் கடமை முடிந்துவிட்டதாக நான் நினைக்கவில்லை."
சாதி தான் தமிழ்நாட்டைப் பிளவுபடுத்தும் முதலாவது சக்தி: முதல்வர் மு.க. ஸ்டாலின்
2 min read

சாதி தான் தமிழ்நாட்டைப் பிளவுபடுத்தும் முதலாவது சக்தி என முதல்வர் மு.க. ஸ்டாலின் சமத்துவ விழாவில் தெரிவித்தார்.

டாக்டர் அம்பேத்கரின் 135-வது பிறந்தநாள் விழா தமிழ்நாடு அரசின் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை சார்பில் சமத்துவ விழாவாக இன்று கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் முதல்வர் மு.க. ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், ஆதிதிராவிடர் நலத் துறை அமைச்சர் மதிவேந்தன், திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. ராசா, பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ. வேலு, விசிக நாடாளுமன்ற உறுப்பினர் திருமாவளவன், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்டோர் கலந்துகொண்டார்கள். விழாவில் சிறப்புரை ஆற்ற அம்பேத்கரின் பேரன் பிரகாஷ் அம்பேத்கர் வருகை தந்தார்.

விசிக நாடாளுமன்ற உறுப்பினர் திருமாவளவன் ஆற்றிய உரை:

"இந்தியாவிலேயே புரட்சியாளர் அம்பேத்கரின் பிறந்தநாளை சமத்துவ நாள் என்று அறிவித்த பெருமை தமிழ்நாடு முதல்வரையே சாரும். இதனை ஓர் அரசு விழாவாக அறிவித்து நாடு தழுவிய விழாவாக ஒவ்வொருவரும் சாதி ஒழிப்பு உறுதிமொழியை ஏற்க வைத்துள்ளார் முதல்வர்.

அனைத்து வகையிலான பாகுபாடுகளைக் கலைந்து பாகுபாடுகளற்ற ஒரு தேசத்தைக் கட்டமைக்க வேண்டும் என அம்பேத்கர் கனவு கண்டார். அந்தக் கனவை நனவாக்குவதற்கான ஓர் ஆயுதமாகத்தான் நம்மிடையே அரசமைப்புச் சட்டத்தை வகுத்தளித்திருக்கிறார். அந்த அரசமைப்புச் சட்டத்தைப் பாதுகாப்பதும் அந்த அரசமைப்புச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதும் தான் இன்று நம் முன் இருக்கும் மிக முக்கியமான சவாலாக மாறியிருக்கிறது.

அரசமைப்புச் சட்டத்தைப் பாதுகாக்கும் நடைமுறைப்படுத்தும் களத்தில் இன்று ஒரு முன்னோடி முதல்வராக இருப்பவர் தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின்.

எல்லா நிலைகளிலும் இன்று பிற மாநிலங்களுக்கு வழிகாடக்கூடிய தலைவராக உயர்ந்து நிற்கிறார்" என்றார் திருமாவளவன்.

முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசுகையில், "இந்த விழாவுக்கு வரும் முன் சைதாப்பேட்டையில் தமிழ்நாட்டின் தனிப்பெரும் தலைவர்களில் ஒருவராக விளங்கிய எம்.சி. ராஜா பெயரில் அமைந்திருக்கக்கூடிய மாணவர் விடுதியைத் திறந்துவைத்து இங்கே வந்துள்ளோம்.

இந்த மேடையில் திருமாவளவன் மகிழ்ச்சியோடு அமர்ந்திருக்கிறார். காரணம், திருமாவளவனும் அந்த விடுதியில் தங்கி படித்தவர் தான். எல்லோருக்கும் அரசியல் சமூக அறிவியல் பாடத்தைச் சொல்லித் தரக் கூடிய சிந்தனையாளராக, கொள்கைப் பிடிப்புமிக்க அரசியல் தலைவராக அவர் உயர்ந்திருக்கிறார் திருமாவளவன்.

அந்த விடுதியில் எம்.சி. ராஜாவின் மார்பளவு சிலை வைக்கப்படும் என்பதை அறிவிக்கிறேன்.

சாதி தான் தமிழ்நாட்டைப் பிளவுபடுத்தும் முதலாவது சக்தி. இந்த ஆயிரமாண்டு அழுக்கை ஒழிக்கத் தான் நாம் பாடுபட்டுக்கொண்டிருக்கிறோம். நாம் அனைவரும் தமிழர்கள் என்கிற உணர்வை உணர்த்துவதற்காகவே இன்று பாடுகிறோம். அதுதான் நம் நோக்கம்.

ஆதிதிராவிடருக்கு நலத்திட்ட உதவிகளைச் செய்வதோடு அரசின் கடமை முடிந்துவிட்டதாக நான் நினைக்கவில்லை. சுயமரியாதை சமத்துவ சமுதாயத்தை உருவாக்க இன்னும் நெடுந்தூரம் பயணிக்க வேண்டும். நம் பாதையும் பயணமும் வெகு நீண்டது. சாதிய ஏற்றத்தாழ்வு இல்லாத சமத்துவ சமுதாயத்தை அமைக்க வேண்டும். இதற்கான மாற்றம் தனி மனிதரிடம் தொடங்கி சமூகத்தின் ஒட்டுமொத்த எண்ணமாக வெளிப்பட வேண்டும். அப்போது தான் ஏற்றத்தாழ்வை நீக்க முடியும்.

கடந்த 100, 200 ஆண்டுகளில் நாம் அடைந்துள்ள வளர்ச்சி, வெற்றி, சமூக மாற்றம் கொஞ்சம் தான். நமக்குள் ஏற்பட்டுள்ள முற்போக்கு சமத்துவ எண்ணங்களும் சிந்தனைகளும் எல்லோரிடமும் எழ வேண்டும். அதற்காக நாம் ஓயாது உழைக்க வேண்டும். வெறுப்பு அரசியலைவிட அன்பை விதைக்கக்கூடிய அரசியல் தான் வலுவானது, ஆற்றல் வாய்ந்தது. தமிழ், தமிழர் என்ற ஒன்று தான் நம்மை ஒன்றிணைக்கும்" என்றார் முதல்வர் ஸ்டாலின். இறுதியில் ஜெய் பீம் என்று சொல்லி உரையை நிறைவு செய்தார்.

இந்த விழாவில், நாடு முழுக்க சாதி ரீதியான ஆணவக் கொலை நடப்பதாலும், ஆணவக் கொலையைத் தடுக்க சட்டமியற்றுமாறும் முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் பிரகாஷ் அம்பேத்கர் கோரிக்கை வைத்தார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in