என் புகைப்படத்தை அவர்கள் காலால் இன்னும் மிதிக்கட்டும்…: உதயநிதி ஸ்டாலின்

தந்தை பெரியார் மீது செருப்புகளை வீசினர். அண்ணல் அம்பேத்கரை எவ்வளவோ அவமதித்தார்கள். பேரறிஞர் அண்ணாவை வசைபாடி மகிழ்ந்தனர்.
என் புகைப்படத்தை அவர்கள் காலால் இன்னும் மிதிக்கட்டும்…: உதயநிதி ஸ்டாலின்
1 min read

`என் புகைப்படத்தை அவர்கள் காலால் இன்னும் நன்கு மிதிக்கட்டும், அதனால் அவர்களின் கால்களாவது சுத்தமாகட்டும்’ என்று பதிவிட்டு, தன் புகைப்படத்தைச் சிலர் காலால் மிதிக்கும் காணொளியைப் பகிர்ந்துள்ளார் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.

உதயநிதி ஸ்டாலின் தன் எக்ஸ் சமூக வலைதளக் கணக்கில் பதிவிட்டவை பின் வருவமாறு:

`என்னை இழிவு செய்வதாக நினைத்து தங்களின் அரசியல் முதிர்ச்சி இவ்வளவுதான் என்று அம்பலப்பட்டு நிற்பவர்களைப் பார்த்து எனக்குப் பரிதாபம் மட்டுமே வருகிறது! கொள்கை எதிரிகளுக்கு நம் மீது இவ்வளவு ஆத்திரம் வருகிறது என்றால், திராவிடக் கொள்கையினை நான் எந்தளவுக்குச் சரியாக பின்பற்றுகிறேன் என்பதற்கான சான்றிதழாகவே இதனைப் பார்க்கிறேன்.

தந்தை பெரியார் மீது செருப்புகளை வீசினர். அண்ணல் அம்பேத்கரை எவ்வளவோ அவமதித்தார்கள். பேரறிஞர் அண்ணாவை வசைபாடி மகிழ்ந்தனர். முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் மீது ஏச்சுக்களையும் - பேச்சுக்களையும் தொடுத்தனர். நம் கழகத் தலைவர் மீது வீசப்படாத கடுஞ்சொற்கள் இல்லை.

அனைவரும் சமம் என்கிற நமது கொள்கை அவர்களுக்கு எரிச்சலூட்டுகிறது. பிறப்பாலும் - மதத்தாலும் பிரித்தாளும் கொள்கையைப் பேசி மக்களை வெல்ல முடியாத அவர்களின் விரக்தி தான் நம்முடைய வெற்றி.

என் புகைப்படத்தை அவர்கள் காலால் இன்னும் நன்கு மிதிக்கட்டும். அவர்களின் அழுக்கேறிய மூளையை நம்மால் சுத்தம் செய்ய முடியாது. அவர்களின் கால்களாவது சுத்தமாகட்டும். கழக உடன்பிறப்புகள் இதைக்கண்டு கோபமுற வேண்டாம்.

இதற்கு எதிர்வினையாற்றுவதை – உணர்ச்சிவசப்படுவதைத் தவிர்த்து, தந்தை பெரியார் - அண்ணல் அம்பேத்கர் - பேரறிஞர் அண்ணா - முத்தமிழறிஞர் கலைஞர் – கழகத் தலைவர் அவர்கள் வழியில் பகுத்தறிவு - சமத்துவப் பாதையில் என்றும் அயராது நடை போடுவோம்’ என்றார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in