மோடிக்காக சேர்ந்தோம், நயினாரால் விலகினோம்: டிடிவி தினகரன் | TTV Dhinakaran |

"விஜய் தலைமையை ஏற்றுக்கொண்டு போவீர்களா என்று செய்தியாளர்கள் கேட்டார்கள். அவர் தலைமையை ஏற்று போனால் என்ன? அவரை ஏன் குறைத்து மதிப்பிட வேண்டும்."
மோடிக்காக சேர்ந்தோம், நயினாரால் விலகினோம்: டிடிவி தினகரன் | TTV Dhinakaran |
2 min read

பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனால் தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து வெளியேறியதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் குற்றம்சாட்டியுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடிக்காக தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்தோம், நயினார் நாகேந்திரனால் வெளியேறினோம் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

2024 நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்து போட்டியிட்டது டிடிவி தினகரன் தலைமையில் அமமுக. 2026 சட்டப்பேரவைத் தேர்தலிலும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெறுவதாகவே நிலை இருந்தது. ஆனால், தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து அமமுக விலகுவதாக டிடிவி தினகரன் கடந்த வாரம் அதிகாரபூர்வமாக அறிவித்தார்.

இதைத் தொடர்ந்து, கூட்டணிக் கட்சிகளை முந்தைய பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை சிறப்பாகக் கையாண்டார் என்றும் தற்போதைய மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் அதைச் சரியாகக் கையாளவில்லை என்றும் டிடிவி தினகரன் நேற்று குற்றம்சாட்டினார்.

இந்நிலையில், அமமுக செயல்வீரர்கள் கூட்டம் நிறைவடைந்த பிறகு மானாமதுரையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார் டிடிவி தினகரன்.

அவர் கூறியதாவது:

"எடப்பாடி பழனிசாமி தான் எங்களுடைய கூட்டணித் தலைவர் என நயினார் நாகேந்திரன் சொல்லியிருக்கிறார். எடப்பாடி பழனிசாமி எடுக்கும் முடிவு தான் எங்களுடைய முடிவு என நயினார் நாகேந்திரன் பேசிய பிறகு, அந்தக் கூட்டணியில் நாங்கள் இருக்க முடியுமா? நயினார் நாகேந்திரன் திட்டமிட்டே நாங்கள் வெளியேற வேண்டும் என்று செயல்பட்டுள்ளார்.

அதனால் தான் நேற்றைய பேட்டியில், ஓ. பன்னீர்செல்வம் மற்றும் டிடிவி தினகரனிடம் நாங்கள் பேசத் தயார் என்று கூறியிருக்கிறார்.

பிரதமர் வந்தபோது, அவரைச் சந்திப்பதற்காக மாநிலத் தலைவரிடம் ஃபோன் செய்திருக்கிறார் ஓ. பன்னீர்செல்வம். அவர் ஃபோன் எடுக்காத காரணத்தால், பேச வேண்டும் என்று கூறி குறுஞ்செய்தி அனுப்பியிருக்கிறார். அதையெல்லாம் மறைத்துவிட்டு, பொய்யாக என்னிடம் வந்து கேட்டிருந்தால், நான் செய்திருப்பேன்னு சொல்கிறார் நயினார் நாகேந்திரன். இது அகம்பாவம் தானே, ஆணவம் தானே.

நாங்கள் வெளியேறுவதற்கு முக்கியக் காரணமே அவருடைய செயல்பாடுகள், அவருடைய மனநிலை.

நேற்றைய பேட்டியில் கூட நான் பேசத் தயார் என அரசியலுக்காக சும்மா சொல்கிறார். அவருடைய மனநிலை அது அல்ல. ஓ. பன்னீர்செல்வத்துக்காக இவர் (டிடிவி தினகரன்) ஏன் பேச வேண்டும் எனக் கேட்கிறார். அவருடைய மனநிலை என்ன என்பது இதிலிருந்தே தெரியவில்லையா?

தமிழ்நாட்டின் மனநிலை அவருக்கும் புரியவில்லை, அவரைச் சேர்ந்தவர்களுக்கும் புரியவில்லை. எங்கள் பின்னணியில்

அண்ணாமலை இருக்கிறார் என்று யாராவது பேசினால் அவர்களுக்கு அரசியல் தெரியவில்லை என்று அர்த்தம். அதுபோல செங்கோட்டையனுக்குப் பின்னால் பாஜக இருக்கிறது என்கிறார்கள்.

நான் எதையும் நடுநிலையாக யதார்த்தத்தைப் பேசுவேன். விஜய் கட்சி ஆரம்பித்த காலத்திலிருந்து நான் சொல்கிறேன். அவருக்கு மக்கள்தான் முடிவு பண்ண வேண்டும். எங்களை விமர்சிக்காதவர்களைப் பற்றி நாங்கள் விமர்சிக்க மாட்டோம். விஜய் தலைமையை ஏற்றுக்கொண்டு போவீர்களா என்று செய்தியாளர்கள் கேட்டார்கள். அவர் தலைமையை ஏற்று போனால் என்ன? அவரை ஏன் குறைத்து மதிப்பிட வேண்டும்.

நீங்கள் நினைக்காத கூட்டணியெல்லாம் அமையவிருக்கிறது. அமமுக இந்தத் தேர்தலில் வெற்றி முத்திரையைப் பதிக்கும். நாங்கள் எந்தக் கூட்டணியில் இருக்கிறோமோ அந்தக் கூட்டணி தான் வெற்றிக் கூட்டணியாக இருக்கப்போகிறது" என்றார் டிடிவி தினகரன்.

TTV Dhinakaran | NDA Alliance | AMMK | ADMK | Nainar Nagenthiran | Annamalai | Vijay | TVK Vijay | Edappadi Palaniswami | O Panneerselvam

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in