
கும்பகோணம் வெற்றிலைக்கும், தோவாளை மாணிக்க மாலைக்கும் புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளதாக அதிகாரபூர்வ செய்தி வெளியாகியுள்ளது.
இதய வடிவிலான கும்பகோணம் வெற்றிலை காவிரி டெல்டா பகுதியின் தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த அய்யம்பேட்டை, ராஜகிரி, பண்டாரவாடை மற்றும் சுவாமிமலை ஆகிய பகுதிகளில் குறு மற்றும் சிறு விவசாயிகளால் பயிரிடப்பட்டுள்ளது. ஒரு ஹெக்டேர் நிலத்தில் இருந்து ஆண்டுதோறும் 60-80 லட்சம் வெற்றிலைகள் அறுவடை செய்யப்படுவதாக கூறப்படுகிறது.
மேலும், கன்னியாகுமரி மாவட்டம் தோவாளைவில் மட்டுமே தயாரிக்கப்படும் ஒரு வகையான சிறப்பு வகை மாலை, தோவாளை மாணிக்க மாலை என்று அழைக்கப்படுகிறது. இந்த மாலைகளில் பயன்படுத்தப்படும் பூக்கள் மடிக்கப்பட்டு, அவை ரத்தினம்போலத் தோற்றமளிக்கும்.
இதற்கிடையே, கும்பகோணம் வெற்றிலைக்கான புவிசார் குறியீடு விண்ணப்பத்தை கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகமும், தோவாளை மாணிக்க மாலைக்கான புவிசார் குறியீடு விண்ணப்பத்தை கன்னியாகுமரி தோவாளை மாணிக்கமாலை கைவினை கலைஞர்கள் நலச்சங்கமும், சென்னையில் உள்ள புவிசார் குறியீடுகள் பதிவகத்திடம் விண்ணப்பங்களை அளித்தன.
இந்நிலையில், இந்த இரு பொருட்களுக்கும் புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளதாக, வழக்கறிஞர் சஞ்சய் காந்தி சென்னையில் இன்று (ஏப்ரல் 1) நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் தகவல் தெரிவித்தார்.
குறிப்பிட்ட பகுதிகளை மையமாக வைத்து பிரத்யேகமாகத் தயாராகும் வேளாண், உணவு மற்றும் கைவினைப்பொருட்கள் அந்த பகுதிகளின் பெயரில் புவிசார் குறியீட்டைப் பெறும் பட்சத்தில், வேறு பகுதிகளில் தயாராகும் பொருட்களை, புவிசார் குறியீடு பெற்ற பொருட்களின் பெயரை வைத்து விற்பனை செய்ய முடியாது. புவிசார் குறியீடுகள் பொருட்களுக்கான தனித்துவமான அடையாளத்தைத் தருகின்றன.