
ஜனநாயகன் பட வேலைகளுக்காக கொடைக்கானல் செல்வதாகவும், யாரும் தன்னை பின்தொடரவேண்டாம் என்றும் தவெக தலைவர் விஜய் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சென்னையில் இருந்து மதுரை விமான நிலையத்திற்குச் செல்லும் விஜய், அங்கிருந்து கொடைக்கானல் செல்லவிருப்பதாக இன்று (மே 1) காலை தகவல் வெளியானது. இதைத் தொடர்ந்து காலை முதலே மதுரை விமான நிலையத்திற்கு வெளியே ஆயிரக்கணக்கான தவெக தொண்டர்கள் குவிய ஆரம்பித்தனர்.
இந்நிலையில் மதுரை செல்வதற்காக சென்னை விமான நிலையம் வந்த விஜய், செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது,
`மதுரை விமான நிலையத்தில் நம் நண்பர்கள், நண்பிகள் அனைவரும் இருக்கிறார்கள். மதுரை மக்கள் அனைவருக்கும் வணக்கம். உங்களது அன்புக்கு கோடானுகோடி நன்றிகள். ஜனநாயகன் பட வேலைகளுக்காக நான் கொடைக்கானலில் படப்பிடிப்பிற்காகச் செல்கிறேன்.
கூடிய விரைவில் மதுரை மண்ணில் கட்சி சார்பில் வேறு ஒரு சந்தர்ப்பத்தில் உங்கள் அனைவரையும் சந்தித்துப் பேசுவேன். இன்றைக்கு ஒரு மணி நேரத்தில் தரையிறங்கியவுடன் உங்களைப் பார்த்துவிட்டு என் வேலையைப் பார்க்க நான் சென்றுவிடுவேன், நீங்களும் பாதுகாப்பாக வீடுகளுக்குச் செல்லுங்கள்.
யாரும் என்னுடைய வேன், காரைப் பின் தொடர்ந்து வருவது, இரு சக்கர வாகனங்களில் வேகமாக வருவது, தலைகவசம் அணியாமல் வாகனம் ஓட்டுவது போன்ற செயல்களில் ஈடுபடவேண்டாம். அந்த காட்சிகளைப் பார்க்கும்போது பதற்றமாக உள்ளது.
கூடிய விரைவில் வேறு ஒரு சந்தர்ப்பத்தில் உங்கள் அனைவரையும் நான் சந்தித்துப் பேசுவேன். அனைவருக்கும் மே தின வாழ்த்துகள். மதுரை விமான நிலையத்தில் இந்த தகவல் என்னால் தெரிவிக்க முடியுமா என்று தெரியவில்லை. அங்கு உள்ள சூழ்நிலை குறித்து தெரியவில்லை எனவே இங்கேயே கூறிவிட்டுக் கிளம்புகிறேன்’ என்றார்.
கட்சி தொடங்கிய பிறகு முதல்முறையாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய விஜய், செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்காமல் சென்றார்.