அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில் முதல்வரின் காலை உணவுத் திட்டம்: தமிழக அரசு
ANI

அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில் முதல்வரின் காலை உணவுத் திட்டம்: தமிழக அரசு

30,992 அரசுத் தொடக்கப் பள்ளிகளில், ஒன்றாம் முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான 18 லட்சத்து 50 ஆயிரம் தொடக்கப் பள்ளி மாணவர்கள் பயன்பெற்று வருகின்றனர்
Published on

கடந்த 2022 செப்டம்பர் 15-ல் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினால் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் 1,545 பள்ளிகளில் தொடங்கப்பட்டது. இந்த திட்டம், 2023 ஆகஸ்ட் 25-ல் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு தொடக்கப் பள்ளிகளுக்கும் விரிவாக்கம் செய்யப்பட்டது.

இந்நிலையில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில் தொடங்கப்படும் என்று தமிழக அரசு இன்று (ஜூலை 13) செய்திக் குறிப்பு வெளியிட்டுள்ளது.

முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் கீழ் 30,992 அரசுத் தொடக்கப் பள்ளிகளில், ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான 18 லட்சத்து 50 ஆயிரம் தொடக்கப் பள்ளி மாணவர்கள் பயன்பெற்று வருகின்றனர். இதனை அடுத்து இந்த வருடத்துக்கான தமிழ்நாடு நிதி நிலை அறிக்கையில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்த அறிவிப்பை செயல்படுத்தும் வகையில் திருவள்ளூர் மாவட்டம், கீழச்சேரி கிராமம் புனித அன்னாள் அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளியில் வரும் ஜூலை 15-ல், முதல்வர் ஸ்டாலினால் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் தொடங்கப்படுகிறது.

அரசு உதவி பெறும் 3,995 தொடக்கப் பள்ளிகளுக்கு முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் விரிவாக்கப்படுவதால், இதன் மூலம் 2,23,536 குழந்தைகள் பயனடைவார்கள் என்று தமிழக அரசின் செய்திக் குறிப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

logo
Kizhakku News
kizhakkunews.in