

ஆணவம் என்பது உண்மையை மறைக்கும், கற்பனை உலகில் வாழ்ந்து கொண்டிருக்கக் கூடாது என்று பேசிய முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்காமல் சென்றார்.
அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சரும் மூத்த நிர்வாகியுமான கே.ஏ. செங்கோட்டையன், கடந்த நவம்பர் 27 அன்று விஜயின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் இணைந்தார். அவருக்கு தமிழக வெற்றிக் கழக உயர்மட்ட மாநில நிர்வாகக் குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளராகப் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து வரும் சட்டமன்ற தேர்தலில் விஜயின் வெற்றிக்காக செங்கோட்டையன் தீவிர பிரசார பணிகளில் ஈடுபடவுள்ளார்.
இந்நிலையில் ஈரோட்டில் அம்பேத்கர் நினைவு நாள் நிகழ்வில் இன்று கலந்து கொண்ட செங்கோட்டையன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
“தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக தமிழ்நாடு முழுவதும் மாவட்ட அலுவலகங்களில் அம்பேத்கரின் நினைவு நாள் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நினைவு நாளில் அவரது புகழைப் போற்றும் வகையில் அவரது திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்படுகிறது. இது தலைமைக் கழகத்தின் ஆணையின் கீழ் நடத்தப்படுகிறது. ஆணவம் என்பது உண்மையை மறைக்கும். கற்பனை உலகில் வாழ்ந்து கொண்டிருக்க கூடாது. இளைஞர்களின் எழுச்சி நாயகனாக எதிர்கால தமிழ்நாட்டை ஆளக்கூடிய தலைவர் விஜய், இன்று சுற்றுப் பயணத்தை மேற்கொள்ளவுள்ளார்” என்று கூறினார். அதன்பின் செய்தியாளர்கள் கேள்வி கேட்டபோது அதற்குப் பதிலளிக்காமல் சென்றார்.
Former Minister Sengottaiyan, participated in Ambedkar memorial day event, left without answering reporters' questions.