அவமரியாதையை ஏற்றுக்கொள்ள மாட்டோம்: செந்தில்பாலாஜி மீது ஜோதிமணி காட்டம்! | Senthilbalaji | Jothimani |

முன்னதாக, திமுக - காங்கிரஸ் இடையே பிளவு ஏற்படத் தொடங்கிவிட்டதாக எடப்பாடி பழனிசாமி பேசியிருந்தார்.

அவமரியாதையை ஏற்றுக்கொள்ள மாட்டோம்: செந்தில்பாலாஜி மீது ஜோதிமணி காட்டம்! | Senthilbalaji | Jothimani |
படம்: https://x.com/jothims
2 min read

கூட்டணி தர்மம் என்பது இரு பக்கமும் இருக்க வேண்டும் என திமுக முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜியை விமர்சித்து காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி பதிவிட்டுள்ளார்.

திமுக முன்னாள் அமைச்சரும் கரூர் மாவட்டச் செயலாளருமான செந்தில்பாலாஜி அண்மையில் ஒரு பதிவைப் பதிவிட்டிருந்தார். அதில், "தமிழ்நாடு தலைநிமிர, முதல்வர் மு.க. ஸ்டாலினின் தலைமையே தேவை என்று உணர்ந்து, கரூர் நகர காங்கிரஸ் மகளிர் அணித் தலைவர் எஸ். கவிதா, தன்னைக் கட்சியில் இணைத்துக் கொண்டார்" என்று குறிப்பிட்டிருந்ததாகத் தெரிகிறது. இந்தப் பதிவு அவருடைய எக்ஸ் தளப் பக்கத்தில் இல்லை. செந்தில் பாலாஜி இதை நீக்கியதாகத் தெரிகிறது. திமுகவும் காங்கிரஸும் கூட்டணியில் இருப்பதால் இந்தப் பதிவு சர்ச்சையானதாகப் பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி எக்ஸ் தளப் பக்கத்தில் செந்தில்பாலாஜியின் செயலுக்கு விமர்சனங்களைப் பதிவிட்டுல்ளார்.

"சில தினங்களாக காங்கிரஸ் கட்சி சார்பாக அர்ஜெண்டினாவில் நடைபெற்ற அரசியல் மாநாட்டில் பங்கேற்க வேண்டியிருந்ததால் கரூர் மாவட்ட திமுக மாவட்டச் செயலாளர் செந்தில் பாலாஜி அவர்களின் இந்தப் பதிவு குறித்து உடனடியாக எதிர்வினையாற்ற முடியவில்லை.

கூட்டணி தர்மம் என்பது இரண்டு பக்கமும் இருக்க வேண்டும். திமுகவின் மாவட்டச் செயலாளர், ஒரு முன்னாள் அமைச்சர் காங்கிரஸ் கட்சியை இப்படி பொதுவெளியில் அவமதிப்பதை நாங்கள் எப்படிப் புரிந்துகொள்வது? கூட்டணியின் பெயரால் இதுபோன்ற அவமரியாதையை ஒருபோதும் நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம். இப்படி நடப்பது இது முதல் முறையல்ல.

கூட்டணி என்பது ஒரு கொள்கை அடிப்படையில், பரஸ்பர புரிதல், ஒத்துழைப்பு, நம்பிக்கை மற்றும் மரியாதையின் அடிப்படையில் உருவாக்கப்படுவது. எந்தச் சூழலிலும் இதில் எதனோடும் சமரசம் செய்துகொள்ள முடியாது.

கரூர் நாடாளுமன்றத் தொகுதியில், காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் இதற்கு எதிர்வினையாற்ற வேண்டிய, காங்கிரஸ் கட்சியின் சுயமரியாதையைக் காப்பாற்ற வேண்டிய கடமையும், பொறுப்பும் எனக்கு இருக்கிறது. இம்மாதிரியான அவமரியாதயை எளிதில் கடந்து போய்விட முடியாது.

கூட்டணிக்குள் இதுபோன்ற கசப்பான சம்பவங்கள் இனிமேல் நடக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இதுகுறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப் பெருந்தகை அவர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர், முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கவனத்திற்கு எடுத்துச் செல்வார் என்று நம்புகிறேன்.

தமிழ்நாட்டின் மொழி, இனம், பண்பாடு , எதிர்காலம் அனைத்திற்கும் பாசிச சக்திகளால் நெருக்கடி ஏற்பட்டிருக்கிற இன்றைய அரசியல் சூழலில் நம் அனைவருக்கும், தமிழ்நாட்டு மக்களின் நலனை முன்னிறுத்திச் செயல்பட வேண்டிய கடமையும், பொறுப்பும் இருக்கிறது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அதுவே தமிழ்நாட்டிற்கு நன்மை செய்யும்" என்று ஜோதிமணி பதிவிட்டுள்ளார்.

மேலும், "பின்குறிப்பு: தமிழ்நாடு மகளிர் காங்கிரசின் கடுமையான எதிர்வினையை அடுத்து செந்தில் பாலாஜி அவர்களின் இப்பதிவு இப்பொழுது நீக்கப்பட்டிருக்கிறது" என்றும் ஜோதிமணி தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, கூடலூரில் இன்று காலை பிரசாரம் மேற்கொண்ட அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, காங்கிரஸ் கட்சி ஆட்சியில் பங்கு கேட்பதாகச் சொல்லி திமுக கூட்டணியில் பிளவு ஏற்பட ஆரம்பமாகிவிட்டது எனப் பேசினார்.

DMK | Congress | DMK Alliance | Senthilbalaji | Jothimani | Karur |

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in