திருச்சி சிறப்பு முகாமில் இருந்த முருகன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ் ஆகியோர் இன்று இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று வந்த பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி, ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகிய 7 பேரும் 32 ஆண்டுகால சிறைவாசத்துக்குப் பிறகு கடந்த நவம்பர் 2022-ல் விடுவிக்கப்பட்டனர்.
இந்த 7 நபர்களில் முருகன், சாந்தன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ் ஆகிய நான்கு பேரும் இலங்கையைச் சேர்ந்தவர்கள். எனவே மற்ற மூன்று பேரையும் தங்களின் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், இலங்கையை சேர்ந்த 4 நபர்களும் திருச்சியில் உள்ள சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டனர்.
இதில், சாந்தனுக்கு கடந்த ஜனவரியில் உடல்நலக்குறைவு ஏற்பட்டு, திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து அவர் மாரடைப்பு காரணமாக காலமானார்.
இதன் பிறகு திருச்சி சிறப்பு முகாமில் இருந்த முருகன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ் ஆகிய மூவரும் இன்று இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
காவல் துறை வாகனம் மூலம் சென்னைக்கு அழைத்து வரப்பட்ட மூவரும், இன்று காலை 10 மணியளவில் சென்னை விமான நிலையத்திலிருந்து விமானம் மூலம் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.