'மதங்களுக்கு அப்பாற்பட்டவர்': ஜெயலலிதாவின் ஆடியோவை வெளியிட்ட ஜெயக்குமார்

"மதவெறி கொண்ட யானையை விட 'மத'வெறி பிடித்துள்ள பாஜக நாட்டிற்கு ஆபத்தானது என்பது அண்ணாமலை போன்றோரின் பேச்சுகளில் இருந்து உணர முடிகிறது."
கோப்புப்படம்
கோப்புப்படம்ANI
1 min read

ராமர் கோயில், பாபர் மசூதி விவகாரம் தொடர்புடைய ஜெயலலிதாவின் பழைய ஆடியோவை வெளியிட்டு, அவர் இரு மதங்களுக்கும் நடுநிலையாக இருந்ததாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, தென் சென்னை பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன் ஆகியோர் ஜெயலலிதாவை, தொடர்ந்து இந்துத்துவத் தலைவர் எனப் பேசி வருகிறார்கள். ஜெயலலிதா நிச்சயமாக இந்துத்துவத் தலைவர்தான் என்றும் அவர்கள் வலியுறுத்தி வருகிறார்கள். இதற்கு ஜெயக்குமார் ஏற்கெனவே கண்டனத்தைப் பதிவு செய்திருந்தார்.

இந்த நிலையில் ராமர் கோயில், பாபர் மசூதி விவகாரம் தொடர்பாக ஜெயலலிதா முன்பு பேசிய ஆடியோ ஒன்றை எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள ஜெயக்குமார். இந்த ஆடியோவை அடிப்படையாகக் கொண்டு, ஜெயலலிதா இரு மதங்களுக்கும் நடுநிலையாக இருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

"இரு மதங்களுக்கும் நடுநிலையாகவே தனது நிலைப்பாட்டைத் தெளிவாக தெரிவித்துள்ளார். இதுதான் ஜெயலலிதாவின் அன்றைய உண்மையான நிலைப்பாடு. அந்தச் செய்தித்தாளில் வந்தது, இந்தச் செய்தித்தாளில் வந்தது என அறமற்று கருத்துகளைப் பேசுவது அரசியல் முதிர்ச்சியின்மையை மக்களுக்குக் காட்டுகிறது.

அவர் இன்று இல்லை என்றவுடன் அவதூறு பரப்பி அவரைக் கலங்கபடுத்த நினைப்பவர்கள் காணாமல் போவார்கள். ஒருவரது தெய்வ நம்பிக்கையை மத நம்பிக்கையாகத் திரித்து மதத் தலைவராக மாற்ற நினைப்பது தான் பாஜகவின் எண்ணம்!

ஒரு தமிழன் என்ற ஒரே காரணத்திற்காக ஒரிசாவில் வளரக் கூடாது என இனத்தை வைத்து அடையாளப்படுத்தி பிளவுபடுத்த நினைப்பதும், மதங்கள் கடந்து எல்லோரும் அம்மாவாக எண்ணுகிற மாபெரும்‌ சமுகநீதி காத்த தலைவரை ஒரு மதத் தலைவர் எனச் சொல்லி மதத்தால் பிளவுபடுத்த நினைப்பதும் தான் பாஜகவின் கொடூர கொள்கை!

தங்கள் சாதனைகளை, தங்கள் தலைவர்களைப் பற்றி பேச முடியாமல் ஜெயலலிதா மீது அவதூறு பரப்பி அண்ணாமலை, தமிழிசை போன்றோர் விளம்பரம் தேடும் முயற்சி வீணாகும் தவிர விவாதம் ஆகாது.

முல்லைப் பெரியாறு விவகாரம், மேகதாது-காவிரி விவகாரம், பாலாறு விவகாரம் என தமிழ்நாட்டைச் சுற்றி மும்முனையிலும் இருந்து தமிழ் மண்ணிற்கு பேராபத்து நேர உள்ளது.

இதில் இருந்து திசை திருப்பி திமுக அரசைக் காப்பாற்றவும், தங்கள் டெல்லி ஓனர்களை நோக்கி எந்தக் கேள்வியும் வரக் கூடாது என்பதற்காகவும், தான் ஒரு பெருமைமிகு கன்னடர் என்பதற்காகவும் இந்த அவதூறை அண்ணாமலை கையில் எடுத்துள்ளார்.

மதவெறி கொண்ட யானையை விட 'மத'வெறி பிடித்துள்ள பாஜக நாட்டிற்கு ஆபத்தானது என்பது அண்ணாமலை போன்றோரின் பேச்சுகளில் இருந்து உணர முடிகிறது.

ஒற்றுமையும் ஒருமைப்பாடும் மிக்க தேசத்தைத் துண்டாட நினைப்பதை விட்டுவிட்டு மக்கள் பிரச்சினைகளை பேசுவதே நாட்டின் நலம் என்பதை எத்தனை ஜென்மங்கள் கழித்து இந்த பாஜக உணரப் போகிறதோ?

தமிழ் மக்களின் மனங்களை வென்று இன்றும் அன்னையாக நிற்கும் ஜெயலலிதாவின் புகழ் என்றும் இந்த மண்ணில் நிலைத்து நிற்கும்!" என்று ஜெயக்குமார் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in