
ஆளுநர் ஆர்.என். ரவி ஜெய் ஸ்ரீ ராம் என்று முழக்கம் எழுப்பச் சொன்னது சர்ச்சையான நிலையில், காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சனிக்கிழமை கலந்துகொண்டார். மாணவர்கள் மத்தியில் உரையாற்றிய ஆளுநர் ஆர்.என். ரவி, அனைவரையும் ஜெய் ஸ்ரீ ராம் என்ற முழக்கத்தை எழுப்பச் சொன்னார். முதலில் இவர் ஜெய் ஸ்ரீ ராம் என்று முழக்கமிட இவரைப் பின்தொடர்ந்து மற்றவர்கள் ஜெய் ஸ்ரீ ராம் என்று முழக்கமிட்டார்கள்.
இதுதொடர்புடையக் காணொளிகள் செய்திகளிலும் இணையங்களிலும் சனிக்கிழமை அதிகளவில் பகிரப்பட்டன. ஆளுநராக இருந்துகொண்டு அரசியலமைப்புப் பதவியை வகித்துக்கொண்டு ஆளுநர் ஆர்.என். ரவி இதுமாதிரி செயல்படுவது சரிதானா என்ற கருத்துகள் எழத் தொடங்கின.
காங்கிரஸ் எம்எல்ஏ ஹசன் மௌலானா ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் இதுபற்றி பேசுகையில், "நாட்டில் உயர்வானப் பதவிகளில் ஒன்றான ஆளுநர் பதவியில் இருந்துகொண்டு மதத் தலைவரைப்போல பேசுகிறார் ஆளுநர் ஆர்.என். ரவி. இது பிரச்னையை உண்டாக்குகிறது. இந்தியா பல்வேறு மதம், மொழி மற்றும் சமூகங்களைக் கொண்டது. ஆளுநர் ஜெய் ஸ்ரீ ராம் என்று முழக்கத்தை எழுப்புமாறு குழந்தைகளிடம் தெரிவிக்கிறார். இது சமநிலையற்ற தன்மையை ஊக்குவிக்கிறது. ஒரு மதச் சித்தாந்தத்தை ஊக்கப்படுத்துகிறது. இதை ஆளுநர் செய்யக் கூடாது. ஆனால், ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவின் பிரசாரங்களை மேற்கொள்பவராக மாறிவிட்டார்" என்றார் காங்கிரஸ் எம்எல்ஏ மௌலானா.
மேலும், "தமிழ்நாடு ஆளுநர் செய்வது மிகவும் கண்டிக்கத்தக்கது. தமிழ்நாட்டில் ஆர்எஸ்எஸ் முகமாக அவர் செயல்படுகிறார். ஆர்எஸ்எஸ் சித்தாந்தங்களைப் பரப்புகிறார். அவர் வகித்து வரும் அரசியலமைப்புப் பதவிக்கு ஏற்ப, அவர் நடுநிலையோடு இருக்க வேண்டும்" என்றார் மௌலானா.
காங்கிரஸ் எம்.பி. சசிகாந்த் செந்தில் எக்ஸ் தளப் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது:
"உச்ச நீதிமன்றத்தால் கடுமையாகக் கண்டிக்கப்பட்ட பிறகு, மாணவர்களிடத்தில் ஜெய் ஸ்ரீ ராம் முழக்கத்தை எழுப்பச் சொல்லும் நாடகங்களில் இறங்கியுள்ளார். நீதிமன்றங்கள் எனக்கு எதிராகத் தீர்ப்பை வழங்கினாலும், என் திட்டங்களைச் செயல்படுத்த மாற்று வழிகளைக் கண்டறிவேன் என்கிற மனநிலை தான் இது. அரசியலமைப்பு மற்றும் ஜனநாயக மாண்புகளை வலுவிழக்கச் செய்யும் ஒரு வகையிலான ஆணவம் மற்றும் பிடிவாதம் கலந்த ஆபத்துக்குரியது" என்று சசிகாந்த் செந்தில் பதிவிட்டுள்ளார்.