
சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாகத்துறையால் கைது செய்யப்பட்ட முன்னாள் திமுக நிர்வாகி ஜாஃபர் சாதிக்கிற்கு சென்னை உயர்நீதிமன்றம் ஜாமின் வழங்கியது.
போதைப் பொருள் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் வேதிப் பொருட்களை, உணவுப் பொருள் பாக்கெட்களில் மறைத்து வைத்து வெளிநாடுகளுக்குக் கடத்தப்படுவதாக மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில், கடந்தாண்டு டெல்லியில் சோதனை நடத்தப்பட்டது.
சோதனையின் தொடர்ச்சியாக, ரூ. 2,000 கோடி மதிப்புடைய வேதிப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. திரைப்படத் தயாரிப்பாளரும், அன்றைய திமுக சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளருமான ஜாஃபர் சாதிக் இந்த கடத்தலுக்கு மூளையாக செயல்பட்டதாகக் குற்றம்சாட்டப்பட்டது. இதை தொடர்ந்து அவர் திமுகவில் இருந்து நீக்கப்பட்டார்.
அதன்பிறகு, மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளால் ஜாஃபர் சாதிக் கைது செய்யப்பட்டு, தில்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டார். இதன் தொடர்ச்சியாக, சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் கடந்தாண்டு ஜூன் 26 அன்று அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார்.
பின்னர் சிறை மாற்று நடைமுறை மூலம் அவர் சென்னை கொண்டு வரப்பட்டு, நீதிமன்றக் காவலின் கீழ் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். அமலாக்கத்துறையால் ஆகஸ்ட் 13 அன்று விசாரணைக்கு அழைக்கப்பட்ட ஜாஃபர் சாதிக்கின் சகோதரர் முகமது சலீம், விசாரணைக்குப் பிறகு கைது செய்யப்பட்டார்.
இதையடுத்து, போதைப்பொருள் கடத்தல் வழக்கில் பல்வேறு நிபந்தனைகளுடன் ஜாஃபர் சாதிக்கிறகு தில்லி போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் ஜாமின் வழங்கியது.
இந்நிலையில், அமலாக்கத்துறை பதிவு செய்த சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் ஜாஃபர் சாதிக்கிற்கும், அவரது சகோதரர் முகமது சலீமிற்கும் சென்னை உயர் நீதிமன்றத்தால் இன்று (ஏப்.21) ஜாமின் வழங்கப்பட்டது.
தில்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா வழக்கை முன்னுதாரணமாக வைத்து ஜாமின் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.