சமாதானம் ஆனது எப்படி?: வைகோ, துரை வைகோ, மல்லை சத்யா பேட்டி

"இணைந்த கைகளுக்கு எப்போதும் வலிமை அதிகம். நாங்கள் இணைந்து இருப்போம்."
கோப்புப்படம்
கோப்புப்படம்
2 min read

மதிமுக நிர்வாகக் குழுக் கூட்டத்தில் முதன்மைச் செயலர் துரை வைகோ, துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா இடையே சமாதானம் ஏற்பட்டது.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் மகனும் கட்சியின் முதன்மைச் செயலருமான துரை வைகோ மற்றும் துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா இடையே மோதல்போக்கு நிலவி வந்தது. இதன் தொடர்ச்சியாக கட்சியின் முதன்மைச் செயலர் பதவியை ராஜினாமா செய்வதாக துரை வைகோ கடந்த ஏப்ரல் 19 அன்று அறிவித்தார். இந்நிலையில், கட்சியின் நிர்வாகக் குழுக் கூட்டம் இன்று கூட்டப்பட்டிருந்தது.

இந்தக் கூட்டத்தில் இருவருக்கும் இடையே சமாதானம் ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, முதன்மைச் செயலர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்த முடிவைத் திரும்பப் பெறுவதாக துரை வைகோ அறிவித்தார்.

மதிமுக நிர்வாகக் குழுக் கூட்டத்தைத் தொடர்ந்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, முதன்மைச் செயலர் துரை வைகோ, துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா ஆகியோர் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தார்கள். அப்போது இருவருக்கும் இடையே சமாதானம் ஏற்பட்டதை வெளிப்படுத்தும் விதமாக இருவரையும் கைகுலுக்கச் செய்து வைகோ சமாதானம் ஆனதை உறுதிபடுத்தினார்.

இதன்பிறகு வைகோ பேசியதாவது

"துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா, முதன்மைச் செயலாளர் துரை வைகோ இடையே கருத்து வேறுபாடுகள் இருந்தன. எல்லோரும் தங்களுடையக் கருத்துகளைப் பேசினார்கள். குறிப்பாக துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா, முதன்மைச் செயலாளர் துரை வைகோ ஆகியோர் மனம்விட்டுப் பேசினார்கள், உள்ளம் திறந்து பேசினார்கள்.

இதில் மல்லை சத்யா குறிப்பிடுகையில், இனிமேல் இப்படிப்பட்ட பதிவுகள் வராது, அப்படிப்பட்ட சூழ்நிலை ஏற்படாது, அதற்கு ஒருபோதும் நான் இடம்கொடுப்பதில்லை என உறுதிமொழி கொடுத்து சகோதரர் துரை வைகோ அதை ஏற்றுக்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். மேலும் மதிமுகவுக்கும் தலைமைக்கும் முதன்மைச் செயலாளருக்கும் உறுதுணையாக இருந்து உறுதியாகச் செயல்படுவேன் என சத்யா சொன்னார்கள். முதன்மைச் செயலர் துரை வைகோ அதனை ஏற்றுக்கொண்டு, ஒற்றுமையாக இருந்து இந்த இயக்கத்தை வலுப்படுத்துவோம் என்று சொன்னதோடு மட்டுமில்லாமல் நடந்தவை நடந்து முடிந்தவையாக இருக்கட்டும் நடப்பவைகள் நல்லவையாக இருக்கட்டும் என துரை வைகோ கூறினார்.

இருவரும் ஒருவரை ஒருவர் கட்டித் தழுவிக்கொண்டு கரம் குலுக்கி நாங்கள் இணைந்து பணியாற்றுவோம் என்ற சமிக்ஞையை நிர்வாகக் குழு உறுப்பினர்களிடத்தில் தெரிவித்தார்கள்" என்றார் வைகோ.

"ஜனநாயக இயக்கங்களில் மாறுபட்ட கருத்துகள் இருக்கலாம். சில நேரங்களில் இயக்கத் தோழர்கள், நிர்வாகிகள் மத்தியில் கருத்து பேறுபாடு வருவது இயல்பு தான். தவிர்க்க முடியாதது அது.

அதுபோல, சமூக வலைதளங்களில் சில பதிவுகள் மூலம் கட்சிக்கும் தலைமைக்கும் அவப்பெயர் உருவாகிற சூழலில் இந்த நிகழ்வு நடந்தது. அதைப் பொறுத்தவரை முக்கிய நிர்வாகிகள் மனம்விட்டு கருத்துகளைத் தெரிவித்தார்கள். சகோதரர் மல்லை சத்யாவும் தெரிவித்தார்.

இந்த இயக்கத்தின் பயணம் சிறப்பாகத் தொடர வேண்டும் என்பதற்காக நாங்கள் பேசினோம். சகோதரர் மல்லை சத்யாவைப் பொறுத்தவரை நான் உள்பட பலர் குற்றச்சாட்டை வைத்தபோது, இறுதியில் வருத்தம் தெரிவித்தார். இனி இயக்கத்துக்கும் தலைவருக்கும் எனக்கும் பக்கபலமாக இருப்பேன் என வாக்குறுதியளித்திருக்கிறார். இதை ஏற்றுக்கொண்டு முதன்மைச் செயலராக மீண்டும் தொடர்வேன் என்று அறிவித்தேன்" என்றார் துரை வைகோ.

"முதன்மைச் செயலர் துரை வைகோ தனது பதவியில் நீடிக்க வேண்டும், என்னுடைய நடவடிக்கைகள் காயப்படுத்தியிருந்தால் அதற்காக நான் வருத்தம் தெரிவிக்கிறேன். நீங்கள் இயக்கத்தை முன்னெடுத்துச் செல்கின்ற இடத்தில் முதன்மைச் செயலராகத் தொடர வேண்டும் என்று என் விருப்பத்தைச் சொல்லியிருக்கிறேன். அவரும் அதை மறுபரிசீலனை செய்து முதன்மைச் செயலராகத் தொடர்வதாகச் சொல்லியிருக்கிறார். இணைந்த கைகளுக்கு எப்போதும் வலிமை அதிகம். நாங்கள் இணைந்து இருப்போம்" என்றார் மல்லை சத்யா.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in