தேசப்பற்று தமிழ்நாட்டுக்கும் தமிழர்களுக்கும் மட்டும்தானா?: சீமான் கேள்வி

"நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்திலிருந்து ஒரு யூனிட்கூட மின்சாரம் தர மாட்டேன் என்று கூறி நான் சண்டையிட்டால்.."
தேசப்பற்று தமிழ்நாட்டுக்கும் தமிழர்களுக்கும் மட்டும்தானா?: சீமான் கேள்வி
படம்: https://twitter.com/_ITWingNTK

தேசப்பற்று தமிழ்நாட்டுக்கும், தமிழர்களுக்கும் மட்டும்தானா என நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வியெழுப்பியுள்ளார்.

தமிழ்நாட்டிலுள்ள 39 மக்களவைத் தொகுதிகளுக்கும் ஒரேகட்டமாக ஏப்ரல் 19-ல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதை முன்னிட்டு, அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று காலை காஞ்சிபுரத்தில் நாம் தமிழர் வேட்பாளர் சந்தோஷை ஆதரித்து வாக்கு சேகரித்தார்.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை, நீட் தேர்வு, நதி நீரை தேசியமயமாக்குவது தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளித்தார்.

"ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை நீக்குவோம் என்று காங்கிரஸ் சொல்லவில்லை. நீட் தேர்வை நடத்துவது யார்? அமெரிக்காவில் உள்ள ஒரு தனியார் நிறுவனம் தேர்வை நடத்துகிறது.

உன் நாட்டில், உன் மாணவர்களுக்குத் தேர்வுகூட நடத்த முடியாத உனக்கு தேர்தல் எதற்கு? தேர்வை நடத்துவதற்கான உரிமையை எதற்கு அமெரிக்காவிடம் ஒப்படைக்கப்பட்டது?

காங்கிரஸும், பாஜகவும் இந்திய ஒருமைப்பாடு, இறையாண்மையைப் பேசக்கூடிய தேசியக் கட்சிகள். அதுவே கர்நாடகம் என்று வந்துவிட்டால், தமிழ்நாட்டுக்கு ஒரு சொட்டுகூட தண்ணீர் தர முடியாது என்று சொல்லக்கூடிய மாநிலக் கட்சியாகிறது.

தமிழ்நாட்டுக்கு ஒரு சொட்டு தண்ணீர்கூட தர முடியாது என்று சொன்னால் இறையாண்மையும் தேசிய ஒருமைப்பாடும் எப்படி இருக்கும்? நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்திலிருந்து ஒரு யூனிட்கூட மின்சாரம் தர மாட்டேன் என்று கூறி நான் சண்டையிட்டால், இறையாண்மையும், ஒருமைப்பாடும் எப்படி நிலைக்கும்?

அவரவர் வளம் அவரவருக்கே என்றால், என் வளம் எனக்கே என்று நான் முடிவெடுத்துவிட்டால் என்ன நடக்கும்? என்னுடைய பெட்ரோலியம், மீத்தேன், ஈத்தேன், பயோகேஸை எடுத்துக்கொள்ளப்படும். என்னுடைய மின்சாரம் எடுத்துக்கொள்ளப்படும். ஆனால், உங்களுடையத் தண்ணீரைத் தரமாட்டேன் என்றால், நான் ஏமாளியா? தேசப்பற்று தமிழ்நாட்டுக்கும் தமிழர்களுக்கும் மட்டும்தானா?

இந்தக் கட்சிகள் அரசியல் லாபத்துக்காக அனைத்தையும் விட்டுக்கொடுக்கின்றன. அதில் தேசநலன் என்று எதுவும் கிடையாது" என்றார் அவர்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in