
`ஐஏஎஸ் அதிகாரி என்றால் தன்னை நீதிமன்றத்தைவிட மேலானவர் என நினைத்துக்கொள்கிறாரா?’ என்று சென்னை மாநகராட்சி ஆணையர் குமரகுருபரனுக்கு எதிராகக் கேள்வி எழுப்பி, நாளை (ஜூலை 10) நேரில் ஆஜராகுமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை மாநகராட்சியின் ஐந்தாவது மண்டலத்திற்கு (ராயபுரம்) உட்பட்ட பகுதியில் இருக்கும் சட்டவிரோத கட்டுமானங்களுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடக்கோரி வழக்கறிஞரும், முன்னாள் கவுன்சிலருமான ருக்மாங்கதன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற அமர்வு, மாநகராட்சியின் ஐந்தாவது மண்டலமான ராயபுரத்தில் உள்ள சட்டவிரோத கட்டடங்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது. அத்துடன் மாநகராட்சியின் பிற மண்டலங்களில் உள்ள சட்டவிரோத கட்டுமானங்கள் மீதும் நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டது.
கடந்த 2021-ல் பிறப்பிக்கப்பட்ட இந்த நீதிமன்ற உத்தரவு தொடர்பாக நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி, சென்னை மாநகராட்சி ஆணையருக்கு எதிராக ருக்மாங்கதன் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு, உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஸ்ரீராம் மற்றும் நீதிபதி சுந்தர்மோகன் அமர்வில் நேற்று (ஜூலை 8) விசாரணைக்கு வந்தபோது, நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாதது குறித்து கேள்வி எழுப்பினர்.
நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாததற்காக சென்னை மாநகராட்சி ஆணையருக்கு ரூ. 1 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டு, இந்த தொகையை ஆணையரின் ஊதியத்தில் இருந்து பிடித்தம்செய்து அதை அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்கு வழங்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக தலைமை நீதிபதி அமர்வில் இன்று (ஜூலை 9), கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர் ஜெ. ரவீந்திரன் முறையிட்டு, அபராத உத்தரவை நிறுத்தி வைக்குமாறு கோரிக்கை வைத்தார்.
அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி, `ஐஏஎஸ். அதிகாரி என்றால் நீதிமன்றத்தைவிட மேலானவர் என்று நினைக்கிறாரா?, நீதிமன்றத்தின் அதிகாரத்தை நாங்கள் காட்டலாமா?’ என்றெல்லாம் காட்டமாக கேள்வி எழுப்பினார்கள்.
இதைத் தொடர்ந்து நாளை (ஜூலை 10) நேரில் ஆஜராக சென்னை மாநகராட்சி ஆணையர் குமரகுருபரனுக்கு உத்தரவிட்டனர்.