

லயோலா கல்லூரி முன்னாள் மாணவர்கள் நடத்திய கருத்துக் கணிப்பில், மீண்டும் ஸ்டாலின் முதலமைச்சர் ஆவார் என்று முடிவுகள் வெளியாகியுள்ளன.
சென்னை லயோலா கல்லுாரி முன்னாள் மாணவர்களால் உருவாக்கப்பட்ட, இந்திய அரசியல் ஜனநாயக யுக்திகள் அமைப்பு சார்பில், 2026 தேர்தலில் யார் முதல்வராவார் என்பது குறித்து, 234 தொகுதிகளில் கருத்து கணிப்பு நடத்தியது. அதன் முடிவில் மீண்டும் ஸ்டாலினே முதலமைச்சர் ஆவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எடப்பாடியை முந்திய விஜய்
இது தொடர்பாக சென்னை சேப்பாக்கத்தில் லயோலா கல்லூரி முன்னாள் மாணவர்கள் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது அவர் கூறியதாவது:-
“மு.க. ஸ்டாலின் 2026-ல் மீண்டும் முதலமைச்சர் ஆவாரா என்ற கேள்விக்கு 55% பேர் ஆம் என்று பதிலளித்துள்ளார்கள். 29% பேர் இல்லை என்று பதிலளித்துள்ளார்கள். அதன்படி திமுக தலைவர் ஸ்டாலின் முதலிடத்தைப் பிடித்துள்ளார். தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்க்கு இரண்டாம் இடமும், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு மூன்றாம் இடமும், சீமானுக்கு நான்காம் இடமும், அண்ணாமலைக்கு ஐந்தாம் இடமும் கிடைத்துள்ளது.
தவெகவால் யாருக்கு பாதிப்பு?
தவெகவால் யாருக்கு அதிகம் பாதிப்பு ஏற்படும் என்ற கருத்துக் கணிப்பின் முடிவில், திமுகவுக்கே அதிகம் பாதிப்பு ஏற்படும் என முடிவுகள் வெளியாகியுள்ளது. அடுத்ததாக விசிக, அதிமுகவுக்கு பாதிப்பு ஏற்படும் எனவும், தவெகவால் நாம் தமிழர் கட்சிக்கு சொற்ப அளவே பாதிப்பு ஏற்படும் என முடிவுகள் வெளியாகியுள்ளது. புதிய வாக்காளர்களை கவரும் இளம் தலைவர்கள் யார் என்ற கருத்துக் கணிப்பில் விஜய்க்கு முதலிடமும், அண்ணாமலைக்கு இரண்டாம் இடமும், உதயநிதிக்கு மூன்றாம் இடமும், சீமானுக்கு நான்காம் இடமும் கிடைத்துள்ளது.
கருத்துக்கணிப்பில் பங்கேற்றோர் யார்?
இந்தக் கருத்துக்கணிப்புக்காக நகரங்களில் 54.8% பேரிடமும், கிராமங்களில் 41.3 சதவீதம் பேரிடமும் கருத்துகள் கேட்கப்பட்டன. 234 தொகுதிகளில் மொத்தம் 81,375 பேரிடம் கேள்விகள் கேட்கப்பட்டன. அதில், 21 முதல் 30 வயதினர் 25.6% பேரிடமும், 46 முதல் 60 வயதினர் 23.5% பேரிடமும் கருத்துக் கேட்கப்பட்டது. கருத்துக் கணிப்பில் பங்கேற்றவர்களில் 41.3% பேர் 31 முதல் 45 வயதுக்குட்பட்டவர்கள் என்று கூறப்பட்டுள்ளது. அதேபோல் இந்த கருத்துக் கணிப்பில் 81.71% பேர் இந்துக்கள் என்றும், 10.55% பேர் கிறிஸ்தவர்கள் என்றும், 7.75% பேர் இஸ்லாமியர்கள்” என்று தெரிவிக்கப்பட்டது.
A poll conducted by Loyola College alumni has revealed that Stalin will become the Chief Minister again.