குட்கா ஊழல் வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது விசாரணை நடத்த தமிழக ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார்.
தமிழ்நாட்டில் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்ய அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டதாக புகார் எழுந்த நிலையில், இதுதொடர்பாக வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
இந்நிலையில் குட்கா ஊழல் வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், ரமணா ஆகியோர் மீது விசாரணை நடத்த ஆளுநர் ஆர்.என். ரவி ஒப்புதல் அளித்துள்ளதாக சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் இவ்வழக்கை விசாரிக்கும் சிபிஐ அதிகாரி தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், “ஒப்புதல் அளித்த கோப்புகள் சிபிஐயின் பரிசீலனையில் உள்ளது. விரைவில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும்” எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து இந்த வழக்கின் விசாரணை ஏப்ரல் 15-க்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது.
முன்னதாக, புதுக்கோட்டை இலுப்பூரில் உள்ள விஜயபாஸ்கர் வீட்டில் இன்று காலை முதல் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது.