
தனது துறைக்குக் குறைவான நிதி ஒதுக்கப்படுவதாகக் கூறி கேள்வி நேரத்தின்போது சட்டப்பேரவையில் குற்றம்சாட்டியுள்ளார் தமிழக தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்.
தமிழக சட்டப்பேரவை இன்று (ஏப்.21) காலை 11 மணிக்குக் கூடியது. முதல் அலுவலாக கேள்வி நேரம் நடைபெற்றது. கேள்வி நேரத்தின்போது கூடலூர் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. பொன். ஜெயசீலன் பேசியதாவது,
`எனது தொகுதியில் வேலைவாய்ப்பை உருவாக்கித் தருவதற்கான எந்த நிறுவனமும் இல்லை. அங்கிருந்து 2 மணி நேரத்தில் மைசூரையும், 4 மணி நேரத்தில் பெங்களூரையும் சென்றடையலாம். எனவே அங்கு உள்ளவர்களும் வந்து வேலை செய்யும் வகையிலும், எங்கள் ஊர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தித் தரும் வகையிலும், கூடலூர் தொகுதியில் ஒரு சிறு தகவல் தொழில்நுட்பப் பூங்காவை அமைத்துத் தருவதற்கு அரசு முன்வருமா என்பதை அறிய விரும்புகிறேன்’ என்றார்.
இதற்குப் பதிலளித்த அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்,
`இந்த கூட்டத்தொடரிலேயே எனது துறையில் இருக்கும் சிக்கல்களை நான் எடுத்துக் கூறியிருக்கிறேன். (எனது துறைக்கு) நிதி மிகவும் குறைவாக ஒதுக்கப்படுகிறது; மற்ற மாநிலங்களைப்போல் அனைத்து தொழில்நுட்பப் பூங்காக்களும் எங்கள் துறையின் கீழ் செயல்படுவதில்லை. ஒரு சிறு பகுதி மட்டுமே எங்கள் துறை வசம் உள்ளது.
பாக்கி டைடல் பார்க், நியோ டைடல் பார்க் போன்றவை தொழில்துறை வசமே உள்ளது. அது அசாதாரண நிலையாக இருந்தாலும், அதுதான் 20 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் உள்ளது. எனவே யாரிடம் நிதி, திறன் மற்றும் அதிகாரம் உள்ளதோ, அவரிடம் கேட்டால் அவர் செய்து கொடுப்பார் என்று கருதுகிறேன். எங்களிடம் கிடையாது’ என்றார்.
உடனே குறுக்கிட்ட சபாநாயகர் அப்பாவு,
`துறைசார்ந்த பிரச்னைகளை முதல்வரிடம் பேசி அமைச்சர் தீர்வு காணவேண்டும்; உறுப்பினர்களின் கேள்விகளுக்கு நேர்மறையான பதிலை வழங்கினால் நன்றாக இருக்கும்’ என்றார்.