தவறான தகவல்களை பரப்பிய இந்திரஜா சங்கர்: தமிழக அரசின் தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்

குழந்தைகளுக்கான ஹெகுரு பயிற்சி குறித்து யூடியூபர் இந்திரஜா ரோபோ சங்கர் தனது `உங்கள் பாண்டியம்மா’ யூடியூப் பக்கத்தில் வெளியிட்ட காணொளி சர்ச்சையானது.
இந்திரஜா சங்கர், கணவர் கார்த்திக் - கோப்புப்படம்
இந்திரஜா சங்கர், கணவர் கார்த்திக் - கோப்புப்படம்https://www.instagram.com/indraja_sankar17/
2 min read

TN Fact Check Heguru Indraja Shankar: ஹெகுரு பயிற்சி குறித்தும், தமிழ்நாட்டு குழந்தைகளின் சிந்தனைத் திறன் குறித்தும், இந்திரஜா ரோபோ சங்கர் மற்றும் அவரது கணவர் கார்த்திக் தவறான தகவல்களை பரப்பியதாக தமிழக அரசின் தகவல் சரிபார்ப்பகம் விளக்கம் அளித்துள்ளது.

குழந்தைகளுக்கான ஹெகுரு பயிற்சி குறித்து யூடியூபர் இந்திரஜா சங்கர் மற்றும் அவரது கணவர் கார்த்திக், தங்களின் `உங்கள் பாண்டியம்மா’ யூடியூப் பக்கத்தில் வெளியிட்ட காணொளி சர்ச்சையானது. இந்நிலையில், அது தொடர்பாக அவர்கள் விளக்கமளித்து கடந்த ஜூன் 30 அன்று மற்றொரு காணொளியை பதிவிட்டுள்ளனர்.

அந்த காணொளியில் பல்வேறு தவறான தகவல்கள் உள்ளதாக குறிப்பிட்டு தமிழ்நாடு தகவல் சரிபார்ப்பகம் வெளியிட்ட எக்ஸ் பதிவில் கூறியதாவது,

`தவறான தகவல் 1: ஹெகுரு என்ற கல்விமுறை/பயிற்சியைப் பற்றி இந்திய அரசு நவ்சேத்னா என்ற வழிகாட்டும் நெறிமுறையை வெளியிட்டுள்ளது. அதை அடிப்படையாக வைத்து தான் இந்த பயிற்சி மையம் செயல்படுகிறது.

இது முற்றிலும் பொய்யான தகவல். மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்ட Navchetana - National framework for early childhood stimulation for children from birth to three years, 2024. இது குழந்தை நலன் மற்றும் பராமரிப்பு குறித்த கட்டமைப்பு தொடர்பான ஆவணம்.

இதில் ஹெகுரு குறித்தோ, Right-Brain activation குறித்தோ எந்த தகவலும் இல்லை. இதிலுள்ள “Early childhood stimulation” என்ற வார்த்தையை மட்டும் வைத்து, இந்த கட்டமைப்பு குறித்த செய்திகளைத் திரித்து கூறுகின்றனர்.

தவறான தகவல் 2: தமிழ்நாட்டில் குழந்தைகளின் சிந்தனைத் திறன் குறைந்துள்ளது. 20 ஆண்டுகளுக்கு முன்பிருந்த சிந்தனைத் திறன் வெகுவாக குறைந்துள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

தமிழ்நாட்டில் குழந்தைகளின் சிந்தனைத் திறனோ, மூளை வளர்ச்சியோ குறைந்ததாக எந்த தரவுகளும் இல்லை. இந்த தகவல் அவர்கள் குறிப்பிடும் நவ்சேத்னாவிலும் இல்லை.

தவறான தகவல் 3: மத்திய அரசு இந்த Right-Brain activation பயிற்சி முறையை செயல்படுத்த தனியாக பட்ஜெட் ஒதுக்கியுள்ளது.

அரசாங்கம் குழந்தைகள் நலன் சார்ந்த திட்டங்கள் பலவற்றை செயல்படுத்தி வருகிறது. ஆனால் இந்த Right-Brain activation அல்லது ஹெகுரு போன்ற பயிற்சிகளை ஊக்குவிக்கவோ, நடைமுறைப்படுத்தவோ அரசு எந்தத் தொகையும் பட்ஜெட்டில் ஒதுக்கவில்லை.

தவறான தகவல் 4: குழந்தை பிறந்தவுடன் கூட அங்கன்வாடியில் சேர்க்க அரசு திட்டம் வகுத்துள்ளது.

இது திரிக்கப்பட்ட தகவல், நவ்சேத்னா குழந்தைகளை மூன்று வயது வரை வீட்டில் வளர்ப்பதையே ஊக்குவிக்கிறது. குழந்தையைப் பராமரிக்க வாய்ப்பில்லாத நிலையில் அங்கன்வாடியில் சேர்க்கலாம் என்று பரிந்துரைக்கிறது.

மேலும், ஹெகுரு ஒரு கல்விமுறை இல்லை, இது ஒரு Activity என்றும் கூறுகிறார். இதுவும் தவறான தகவல்.

சென்னையில் செயல்படும் ஹெகுரு பயிற்சி மையத்தின் சமூக வலைதளப் பக்கத்தில் இது ‘JAPAN CERTIFIED RIGHT BRAIN EDUCATION’ என்றுதான் குறிப்பிட்டுள்ளனர். அவர்களது இணையதளப் பக்கத்திலும் “RIGHT BRAIN EDUCATION” என்றுதான் குறிப்பிட்டுள்ளனர். தவறான தகவல்களைப் பரப்பாதீர்!’ என்று கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in