முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி மறைவு: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

”நெடிய அரசியல் அனுபவம் கொண்டவரான புலவர் இந்திரகுமாரி அவர்கள் தமிழக அமைச்சரவையில் இடம்பெற்று மக்களுக்குப் பணியாற்றியவர்”.
முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி மறைவு
முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி மறைவு

முன்னாள் அமைச்சரும், திமுக இலக்கிய அணித் தலைவருமான இந்திரகுமாரி நேற்று காலமானார். அவருக்கு வயது 73.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அமைச்சரவையில் 1991 முதல் 1996 வரை சமூக நலத்துறை அமைச்சராக பணியாற்றியவர் இந்திரகுமாரி. இவர் 2006-ல் திமுகவில் தன்னை இணைத்துக்கொண்டார். இவருக்கு திமுக இலக்கிய அணித் தலைவர் பதவி வழங்கப்பட்டது.

இந்நிலையில் சிறுநீரக பாதிப்பு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். அவரது மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

ஸ்டாலின் கூறியதாவது:

“கழக இலக்கிய அணித் தலைவர் புலவர் இந்திரகுமாரி அவர்கள் மறைந்த துயரச் செய்தி வந்து சோகத்தில் ஆழ்த்தியது. நெடிய அரசியல் அனுபவம் கொண்டவரான புலவர் இந்திரகுமாரி அவர்கள் தமிழக அமைச்சரவையில் இடம்பெற்று மக்களுக்குப் பணியாற்றியவர். தீராத் தமிழ்ப் பற்றுடன் இலக்கிய வெளியில் இயங்கியவர். அவரது மறைவு கழகத்திற்கும் இலக்கிய உலகிற்கும் பேரிழப்பாகும். புலவர் இந்திரகுமாரி அவர்களைப் பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், கழக உடன்பிறப்புகள் என அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார். மேலும் இன்று நேரில் சென்று இந்திரகுமாரி உடலுக்கு அஞ்சலி செலுத்தினார் ஸ்டாலின்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in