
எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தால் நானும் போர்க்களத்திற்குச் செல்வேன்; எந்த கட்சியைச் சேர்ந்தவராக இருந்தாலும், தேச உணர்வு இருக்கவேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பேசியுள்ளார்.
பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் உள்ள 9 பயங்கரவாத முகாம்களை ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்திய பாதுகாப்புப் படைகள் தாக்கி அழித்துள்ளன.
இந்நிலையில், ஆபரேஷன் சிந்தூர் குறித்து இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் நயினார் நாகேந்திரன் கூறியதாவது,
`ஒவ்வொரு இந்தியருக்கும் இது மகிழ்ச்சிகரமான நாளாக அமைந்துள்ளது. பஹல்காமில் கொல்லப்பட்ட 26 பேரின் ஆன்மா இன்று சாந்தி அடைந்திருக்கும். பஹல்காம் தாக்குதல் நடந்தபிறகு எடுத்தோம் கவிழ்த்தோம் என்று இல்லாமல், தீர ஆராய்ந்து பாகிஸ்தானில் உள்ள தீவிரவாதிகளை மட்டும் குறிவைத்து தாக்குதல் நடந்துள்ளது.
என் தேசத்தில் ஒரு பகுதியை இழந்தால்கூட உலக வரைபடத்தில் பாகிஸ்தான் என்ற நாடு இருக்காது என முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் குறிப்பிட்டார். இது நம் நாட்டின் பிரச்னை; அவ்வளவு எளிதில் விட்டுக்கொடுக்கமுடியாது.
பஹல்காம் தாக்குதலில் கணவனை இழந்த பெண்களால் நேற்றியில் குங்குமம் (சிந்தூர்) வைக்க முடியாமல்போனது. அதை குறிப்பிடும் விதமாகவே இந்த ராணுவ தாக்குதலுக்கு ஆபரேஷன் சிந்தூர் என்று பெயர் வைக்கப்பட்டது.
என்னால் போரில் கலந்துகொள்ள முடியவில்லை என்பது வருத்தமாக உள்ளது. எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தால் நானும் போர்க்களத்திற்குச் செல்வேன். இதை நான் விளையாட்டுக்காக சொல்லவில்லை. எந்த கட்சியைச் சேர்ந்தவராக இருந்தாலும், நமது நாடு என்று வரும்போது தேச உணர்வு இருக்கவேண்டும்.
ஒருவர் நம்மை தாக்கும்போது எப்படி நாம் திருப்பியடிக்காமல் இருக்க முடியும்? இந்தியாவுக்குச் சொந்தமான ஒரு சென்ட் இடமாக இருந்தாலும், எவ்வளவு விலை கொடுத்தாவது அதை மீட்டெடுக்கவேண்டும்’ என்றார்.