முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சகாயத்திற்கான பாதுகாப்பு விவகாரம்: மதுரை நீதிமன்றம் எச்சரிக்கை!

கடந்த 20 மார்ச் 2023-ல் நடைபெற்ற பாதுகாப்பு குழுவின் ஆய்வுக்குப் பிறகு, உயிருக்கு அச்சுறுத்தல் இல்லாத 22 பேருக்கு பாதுகாப்பு விலக்கிக்கொள்ளப்பட்டது.
கிரானைட் குவாரி - கோப்புப்படம்
கிரானைட் குவாரி - கோப்புப்படம்
1 min read

கிரானைட் மோசடி வழக்கில் சாட்சியளிக்கும் வகையில் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சகாயத்திற்கு தமிழக காவல்துறை பாதுகாப்பு வழங்கவில்லை என்றால், துணை ராணுவப்படை பாதுகாப்பு வழங்க உத்தரவிடப்படும் என்று மதுரை நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மதுரை மாவட்டத்தில் செயல்பட்டு வந்த கிரானைட் குவாரிகளில் நடந்த விதி மீறல்களால், தமிழக அரசுக்குப் பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக கடந்த 2012-ல் புகார்கள் எழுந்தன. இது குறித்து அன்றைய மதுரை ஆட்சியர் சகாயம் விசாரணை நடத்தி அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்தார். இந்த சட்டவிரோத கிரானைட் குவாரிகள் தொடர்பாக வழக்குகள், கனிம வழக்குகளுக்கான மதுரை சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றன.

இந்த வழக்கு விசாரணையின்போது ஆஜராகி சாட்சியம் அளிக்கும்படி முன்னாள் ஆட்சியர் சகாயத்திற்கு இரு முறை மதுரை சிறப்பு நீதிமன்றத்தால் சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் அவர் ஆஜராகவில்லை. இதையடுத்து விசாரணையில் ஆஜராகும்படி 3-வது முறையாக அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டது.

இந்நிலையில், தனக்கு வழங்கப்பட்ட காவல்துறை பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டதால் நீதிமன்றத்தில் ஆஜராக முடியவில்லை என்றும், பாதுகாப்பைத் திரும்பப் பெறப்பட்டது நியாயமற்றது என்றும் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் சகாயம் வெளிப்படையாக குற்றச்சாட்டினார்.

சகாயத்துக்கான காவல்துறை பாதுகாப்பு திரும்பப் பெறப்பட்டதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து, இது குறித்து தமிழக காவல்துறை இயக்குநர் சங்கர் ஜிவால் கூறியதாவது,

`கடந்த 20 மார்ச் 2023-ல் நடைபெற்ற பாதுகாப்பு குழுவின் ஆய்வுக்குப் பிறகு, உயிருக்கு அச்சுறுத்தல் இல்லாத 22 பேருக்கு வழங்கப்பட்டுவந்த பாதுகாப்பு விலக்கிக்கொள்ளப்பட்டது; அதில் சகாயமும் ஒருவர். இருந்தாலும் நீதிமன்றத்தில் சாட்சியம் அளிப்பதற்கு வசதியாக சகாயத்துக்கு பாதுகாப்பு வழங்கப்படும்’ என்றார்.

இந்நிலையில், கிரானைட் குவாரி வழக்கு நீதிபதி லோகேஸ்வரன் முன்னிலையில் இன்று (மே 5) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, சகாயம் ஆஜராகவில்லை.

அது குறித்து கேள்வி எழுப்பிய நீதிபதி, `நீதிமன்றத்தில் ஆஜராக சகாயத்துக்கு ஏன் பாதுகாப்பு வழங்கப்படவில்லை?. அவருக்குப் பாதுகாப்பு வழங்கப்படுமா? என்பதை கேட்டு நீதிமன்றத்தில் தெரிவிக்கவேண்டும்; பாதுகாப்பு வழங்காவிட்டால், பாதுகாப்பு வழங்க துணை ராணுவப் படைக்கு உத்தரவிடப்படும்’ என்று கூறி வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in