கோவை சிறையில் நான் கொல்லப்படுவேன்: சவுக்கு சங்கர்

"கோவை மத்திய சிறை கண்காணிப்பாளர் செந்தில்குமார்தான் என் கையை உடைத்தார். கோவை சிறையில் என் உயிருக்கு ஆபத்து."
கோவை சிறையில் நான் கொல்லப்படுவேன்: சவுக்கு சங்கர்
1 min read

பெண் காவல் அதிகாரிகளை அவதூறாகப் பேசிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள யூடியூபர் சவுக்கு சங்கர், கோவை சிறையில் தான் கொல்லப்படுவேன் என்று தெரிவித்துள்ளார்.

சவுக்கு சங்கர், நேர்காணல் ஒன்றில் பெண் காவல் அதிகாரிகளைத் தரக்குறைவாகப் பேசியதாக அவர் மீது கோவை, சேலம், திருச்சி, சென்னை ஆகிய மாவட்டங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

முதலில் வழக்குப்பதிவு செய்த கோவை மாநகர் சைபர் கிரைம் காவல் துறையினர், சவுக்கு சங்கரை தேனியில் வைத்து கடந்த 4-ம் தேதி கைது செய்தார்கள். இந்த வழக்கில் இவர் நீதிமன்றக் காவலில் உள்ளார். தேனியில் போதைப் பொருள் வைத்திருந்ததாகக் கூறி இவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கிலும் சவுக்கு சங்கர் நீதிமன்றக் காவலில் உள்ளார்.

இந்த வழக்குகளைத் தொடர்ந்து, சவுக்கு சங்கரை குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையிலடைக்க சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவிட்டார்.

இதனிடையே, கோவை சிறையில் சவுக்கு சங்கர தாக்கப்பட்டதாக அவரது வழக்கறிஞர் குற்றம்சாட்டினார். இதற்கு தமிழ்நாடு சிறைத் துறை சார்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டது.

எனினும், போதைப் பொருள் வழக்கில் மதுரை போதைப் பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த 8-ம் தேதி சவுக்கு சங்கர் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவர் கையில் கட்டு போட்டு வந்திருந்தார். இதனால், அவருக்குக் கையில் காயம் ஏற்பட்டது உறுதியானது.

சிறைக்குச் சென்று நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் மாவட்ட சட்டப் பணிகள் ஆணையக் குழு நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தது. இதனடிப்படையில், சவுக்கு சங்கருக்கு உரிய சிகிச்சையளிக்க கோவை நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த நிலையில், மருத்துவப் பரிசோதனைக்காக சவுக்கு சங்கர் இன்று கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார். அப்போது, "கோவை மத்திய சிறை கண்காணிப்பாளர் செந்தில்குமார்தான் என் கையை உடைத்தார். கோவை சிறையில் என் உயிருக்கு ஆபத்து. கோவை சிறையில் நான் கொல்லப்படுவேன்" என்று சவுக்கு சங்கர் முழக்கங்களை எழுப்பினார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in