தமிழக மீனவர்கள் கைது: பிரதமர் தலையிட முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்

"அவர்கள் வெறும் தமிழர்கள் மட்டுமல்ல, பெருமைக்குரிய இந்தியர்கள்."
முதல்வர் ஸ்டாலின், பிரதமர் மோடி (கோப்புப்படம்)
முதல்வர் ஸ்டாலின், பிரதமர் மோடி (கோப்புப்படம்)ANI
1 min read

இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படும் விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோர் உடனடியாகத் தலையிட வேண்டும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது:

"இலங்கை கடற்படையினரால் தமிழ்நாட்டு மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவது மிகுந்த வேதனையளிக்கிறது. கடந்த இரு மாதங்களாக கைது நடவடிக்கைகள் கடுமையாக அதிகரித்துள்ளன. 69 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். 3 மீனவர்கள் தொடர் குற்றத்தில் ஈடுபடுவர்கள் என முத்திரை குத்தப்பட்டு, நீண்ட காலமாக சிறையிலடைக்கப்பட்டிருப்பது மேலும் கவலைக்குரியதாக உள்ளது.

இந்த நிலைமை நமது மீனவர்களின் வாழ்வாதாரத்தை அச்சுறுத்துவது மட்டுமில்லாமல், கடுமையான உழைப்பால் சேகரித்து வைத்த பணத்தைக் கொண்டு மீனவர்கள் வாங்கிய படகுகள் இலங்கை அரசால் நாட்டுடமையாக்கப்படுகிறது.

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் இந்த விவகாரத்தில் தலையிட்டு மீனவர்கள் மற்றும் அவர்களது படகுகள் விடுவிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்பதை தமிழ்நாட்டு மக்கள் சார்பாக வலியுறுத்துகிறேன். மீனவர்கள் நலன் கருதி இந்த விவகாரத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து உறுதியான முடிவை எடுக்க வேண்டியது கட்டாயமாக உள்ளது. அவர்கள் வெறும் தமிழர்கள் மட்டுமல்ல, பெருமைக்குரிய இந்தியர்கள்."

logo
Kizhakku News
kizhakkunews.in