திமுகவை ஆட்சியில் இருந்து அகற்றும் வரை செருப்பு அணியமாட்டேன்: அண்ணாமலை

நாளை (டிச.26) காலை 10 மணிக்கு எனக்கு நானே சாட்டையால் அடித்துக் கொள்ளும் போராட்டம்.
திமுகவை ஆட்சியில் இருந்து அகற்றும் வரை செருப்பு அணியமாட்டேன்: அண்ணாமலை
1 min read

அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் சாட்டையடிப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாகவும், திமுகவை ஆட்சியில் இருந்து அகற்றும் வரை செருப்பு அணியப்போவதில்லை எனவும் அறிவித்துள்ளார் பாஜக தலைவர் அண்ணாமலை.

சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் இரண்டாம் ஆண்டு பொறியியல் படிப்பு படித்து வரும் மாணவி ஒருவர் கடந்த டிச.23-ல் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து, கோட்டூர்புரத்தைச் சேர்ந்த ஞானசேகரன் என்பவர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில், இந்த வழக்கு தொடர்புடைய முதல் தகவல் அறிக்கை இன்று (டிச.26) காலை வெளியானது. பாலியல் வன்கொடுமை வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணின் விவரங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை இதற்குக் கண்டனம் தெரிவித்திருந்தார்.

இதைத் தொடர்ந்து, இந்த விவகாரம் தொடர்பாக கோவையில் இன்று (டிச.26) செய்தியாளர்களைச் சந்தித்து அண்ணாமலை அளித்த பேட்டி பின்வருமாறு,

`திமுக கட்சிப் போர்வை இன்றைக்கு குற்றம் செய்பவர்களுக்கு தேவைப்படுகிறது. திமுக என்ற போர்வை இருந்தததால் மட்டும்தான் அந்தப் பெண் மீது அவன் கை வைத்திருக்கிறான். திமுகவில் கட்சிப் பொறுப்பு இருக்கிறது, திமுக அமைச்சர்களுடன் நெருக்கம் உள்ளது என்கிற ஒரே காரணத்தால் மட்டுமே ஏற்கனவே செய்த குற்றத்தை அவன் மீண்டும் செய்திருக்கிறான்.

எப்படி எஃப்.ஐ.ஆர். வெளியானது? காவல்துறையைத் தவிர அந்த எஃப்.ஐ.ஆரை யாரும் வெளியிட முடியாது. படிக்காத ஆட்கள் கூட எஃப்.ஐ.ஆரை ஒழுங்காக எழுதுவார்கள். அந்தப் பெண் குற்றம் செய்ததைப்போல எஃப்.ஐ.ஆர். எழுதப்பட்டுள்ளது. அதைப் படித்தால் ரத்தம் கொதிக்கிறது. பெண்ணின் பெயர், கைபேசி எண், தந்தை பெயர், ஊர் என அனைத்தும் வெளியாகியிருக்கிறது.

நான் பேசுவது பிரதமர் மோடியை பிரதிபலிக்கும் என்பதால் நான் நாகரீகமாக பேசிக்கொண்டிருக்கிறேன். மாநிலத் தலைவராக இந்தக் கட்சியின் தொண்டனாக நான் ஒரு உறுதிமொழி எடுத்திருக்கிறேன். நாளையில் இருந்து பொதுவான ஆர்ப்பாட்டம் என்பது கிடையாது. இனி ஒவ்வொரு வீடுகளுக்கும் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.

நாளை காலை 10 மணிக்கு எனக்கு நானே சாட்டையடி கொடுக்கும் போராட்டத்தை என் வீட்டிற்கு வெளியே நான் நிகழ்த்தப்போகிறேன். என் இல்லத்திற்கு வெளியே நின்று சாட்டையில் 6 முறை என்னை அடித்துக் கொள்ளப்போகிறேன். திமுக என்ற கட்சியை தமிழகத்தின் ஆட்சியில் இருந்து அகற்றும் வரை நாளையில் இருந்து நான் செருப்பு அணியப் போவதில்லை’ என்றார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in