
மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணயம், 2024-ம் ஆண்டிற்கான குடிமைப் பணித் தேர்வு முடிவுகளை நேற்று (ஏப்.23) வெளியிட்டது. இதில், தமிழக அரசின் `நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்ற 50 மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.
2022-ல் தமிழக அரசு நான் முதல்வன் திட்டத்தை தொடங்கியது. மத்திய அரசுப் பணிகளில் அதிகளவில் தமிழக மாணவர்கள் இடம் பெறவேண்டும் என்ற நோக்கத்தில் போட்டித் தேர்வுகளுக்காக மார்ச் 2023-ல் தனி பிரிவு ஏற்படுத்தப்பட்டது.
குறிப்பாக, யுபிஎஸ்சி குடிமைப்பணித் தேர்வில் கலந்துகொள்ளும் தமிழக மாணவர்களுக்காக நான் முதல்வன் திட்டத்தின் கீழ் ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.
யுபிஎஸ்சி முதல்நிலை தேர்வை எழுதவுள்ள தமிழகத்தைச் சேர்ந்த ஆயிரம் மாணவர்களை, ஜூலை மாதம் நடைபெறும் மதிப்பீட்டுத் தேர்வு மூலம் தேர்தெடுத்து, மாதம் தலா ரூ. 7,500 ஊக்கத்தொகையாக 10 மாதங்களுக்கு வழங்கப்படுகிறது.
அதன்பிறகு, முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சிபெற்று முதன்மைத் தேர்வை எழுதும் மாணவர்களுக்கு ரூ. 25,000 ஊக்கத்தொகையாக வழங்கப்படும். அத்துடன் தேர்வுக்கான பயிற்சி, ஆலோசனைகள் போன்றவையும் அளிக்கப்படும்.
கடந்தாண்டு 1,000 மாணவர்களுக்கு முதல்நிலை தேர்வுக்கான ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. அதன்பிறகு முதன்மைத் தேர்வுக்குத் தகுதி பெற்ற 559 மாணவர்களுக்கு தலா ரூ. 25,000 ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, நேர்முகத் தேர்வுக்கு தேர்ச்சிபெற்ற 134 மாணவர்களில், 50 மாணவர்கள் இறுதி பட்டியலில் இடம் பெற்றனர்.
இந்த 50 மாணவர்களில், 18 மாணவர்கள் ஊக்கத்தொகையுடன் கூடிய உறைவிடப் பயிற்சியை எடுத்தவர்கள். 32 மாணவர்கள் ஊக்கத்தொகை மட்டுமே பெற்றவர்கள்.
தமிழக அரசு நடத்தும் மதிப்பீட்டுத் தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்கள் விரும்பும் பட்சத்தில், சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள தமிழக அரசுக்குச் சொந்தமான அகில இந்திய குடிமைப் பணி தேர்வுப் பயிற்சி மையத்தில் உறைவிட வசதியுடன் தேர்வுக்கான பயிற்சி வழங்கப்படும்.