
தி.க. நிகழ்ச்சியில் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய தமிழக வனத்துறை அமைச்சர் பொன்முடியை பதவி நீக்கம் செய்யக்கோரி தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
திராவிடர் கழகம் சார்பில் கடந்த ஏப்.8-ல் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அமைச்சர் பொன்முடி, சைவம், வைணவம் குறித்தும், பெண்கள் குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார். இதற்குப் பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், திமுக துணைப் பொதுச்செயலாளர் பொறுப்பில் இருந்து அவர் நீக்கப்பட்டார்.
இந்நிலையில், `பொன்முடியின் பேச்சு கருத்துரிமைக்குக் கீழ் வராது. மக்கள் பிரதிநிதி என்ற அடிப்படையில், அவரது பேச்சு அரசியல் சாசனத்திற்கு எதிரானது. பதவி பிரமாணத்தை மீறி செயல்பட்ட அமைச்சர் பொன்முடியை பதவி நீக்கம் செய்ய உத்தரவிட வேண்டும்’ என்று குறிப்பிட்டு வழக்கறிஞர் பி. ஜெகன்நாத் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
தலைமை நீதிபதி ஸ்ரீராம் மற்றும் நீதிபதி முகமது சபீக் ஆகியோர் அடங்கிய அமர்வில் இந்த வழக்கு மீதான விசாரணை இன்று (ஏப்.24) நடைபெற்றது.
தமிழக அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர், `மனுதாரர் தாக்கல் செய்துள்ள கூடுதல் மனுவில், இந்த வழக்குக்கு தொடர்பில்லாமல் உள்ள முதல்வர் குறித்த அவதூறு கருத்துகளை நீக்க வேண்டும்’ என்று வலியுறுத்தினார். இதை மனுதாரர் ஏற்றுக்கொள்ளவே, அரசு தலைமை வழக்கறிஞர் சுட்டிக்காட்டிய பகுதிகளை நீக்கும்படி அவருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
அதன்பிறகு இந்த வழக்கில் ஜூன் 5-க்குள் பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஜூன் 19-க்கு ஒத்தி வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.