
தாலியைக் கழற்றி வைத்துவிட்டு தேர்வெழுதவேண்டும் என்கிற நீட் விதிமுறை வரலாறு காணாத அத்துமீறல் என்று தமிழக சுகாதார அமைச்சர் மா. சுப்பிரமணியன் குற்றம்சாட்டியுள்ளார்.
நாட்டின் மருத்துவக் கல்லூரிகளில் இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வு நேற்று (மே 4) நடைபெற்றது. தமிழகத்தைப் பொறுத்தளவில் இந்த தேர்வில் கலந்துகொள்ள சுமார் 1 லட்சத்து 50 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர்.
நீட் தேர்வில் கலந்துகொள்ள தேர்வு மையங்களுக்கு வந்த மாணவர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. மாணவிகள் ஆபரணங்கள் அணிவதற்கும், மாணவர்கள் முழுக்கை சட்டை அணிவதற்கும் அனுமதி மறுக்கப்பட்டது.
இந்நிலையில், இன்று (மே 5) காலை நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் தமிழக சுகாதார அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறியதாவது,
`நீட் வந்த நாள் முதலே குளறுபடிகள் நடைபெற்று வருகின்றன. கடந்தாண்டு உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு கண்டனங்களுக்கு உள்ளாகியது. மத்திய அரசு நடத்தும் நீட் தேர்வில் முறைகேடுகள் மட்டுமல்லாமல், பல்வேறு ஒழுங்கீனங்களும் நடைபெறுகின்றன. மாணவர்களின் மனநிலையை சீர்குலைக்கும் வகையில் ஏராளமான நிகழ்வுகள் நடந்தேறின.
தாலியைக் கழற்றி வைத்துவிட்டு தேர்வெழுதவேண்டும் என்கிற விதிமுறை எல்லாம் வரலாறு காணாத அத்துமீறல். ஒரு தேர்வு மையத்தில் பார்த்தேன், கணவனே தன் மனைவியின் தாலியைக் கழற்றி, மையத்திற்குள் அனுப்பிய துர்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது. பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் நீட் நீட்டாக நடைபெறுவதாக புலமைமிக்க வார்த்தைகளை உபயோகப்படுத்தியுள்ளார்.
நீட் தேர்வால் 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதை நாடே அறியும். நீட் விலக்கிற்காக தமிழக முதல்வர் நடவடிக்கைகள் எடுத்துக்கொண்டிருக்கிறார். முதல்வரின் நடவடிக்கைக்கு மத்திய அரசு முட்டுக்கட்டையாக உள்ளது.
நீட் விலக்கு பெற எடப்பாடி பழனிசாமி, தமிழிசை சௌந்தரராஜன் ஆகியோர் தமிழக அரசுக்கு உதவ வேண்டும். அதைவிட்டுவிட்டு அரசைக் குற்றம்சாட்டுவது அவர்களின் கையாலாகாத தனத்தை காட்டுகிறது’ என்றார்.