
2020-க்குப் பிறகு பணியில் சேர்ந்த தற்காலிக பணியாளர்களை நீக்க தமிழக அரசுக்குச் சென்னை உயர் நீதிமன்றம் இன்று (பிப்.25) உத்தரவு பிறப்பித்துள்ளது.
கடந்த 1997-ல் அரியலூர் மாவட்ட ஊரக வளர்ச்சித்துறையில், தினக்கூலி அடிப்படையில் கணிப்பொறி உதவியாளராக நியமிக்கப்பட்ட சத்யா என்கிற நபர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்தார். இத்தனை ஆண்டு காலமாக பணி செய்து வரும் தனக்கு, பணி வரன்முறை செய்ய உத்தரவிடக்கோரி அவர் கோரிக்கை வைத்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், மனுதாரரின் கோரிக்கையைப் பரிசீலித்து 12 வாரங்களில் முடிவெடுக்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தது தமிழக ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை.
இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், தற்காலிக அடிப்படையில் பணி நியமனங்கள் மேற்கொள்ளப்படமாட்டாது என்று தமிழக தலைமைச் செயலாளர் சார்பில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்படுமா என்று கேள்வி எழுப்பியிருந்தது.
இந்நிலையில், மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை மீண்டும் இன்று (பிப்.25) நீதிபதிகள் ஆர். சுப்பிரமணியம், ஜி. அருள்முருகன் அமர்வு விசாரித்தது.
அப்போது ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் உயர் நீதிமன்றத்தில் ஓர் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், தற்காலிக பணி நியமனங்களை கைவிடுதாக கடந்த 2020 நவம்பர் 28-ல் அரசாணை பிறப்பிக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டிருந்தது.
இதைத் தொடர்ந்து, அரசாணை பிறப்பிக்கப்பட்ட நாளுக்குப் பிறகு, நியமிக்கப்பட்ட அனைத்து தற்காலிக ஊழியர்களையும் பணியில் இருந்து விடுவிக்குமாறு நீதிமன்றத்தால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மேலும், தற்காலிக ஊழியர்களை நியமனம் செய்த அதிகாரிகளுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்குமாறும் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த உத்தரவுகள் தொடர்பாக எடுக்கப்பட்ட மேல் நடவடிக்கைகள் குறித்து, மார்ச் 17-க்குள் அறிக்கை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டு வழக்கு விசாரணை அதே தேதிக்கு ஒத்திவைத்தது உயர் நீதிமன்றம்.